பி.எம்.எம்.ஏ.காதர்-
கவிதை பற்கள் உள்ளது அதை சரியாகக் கையாளாவிட்டால் கவிஞனின் கையைக் கடித்து விடும் இப்படி கவிதையால் கடிக்கப்பட்ட பலரை நாங்கள் கண்டிருக்கிறோம் என கவிஞர் சோலைக் கிளி தெரிவித்தார்.
மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'மிதக்கும் கனவுகள்'நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த (18-10-2015) ஞாயிற்றுக்கிழமை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
எனது ஆசான் மஜீட் சேர் அவர்களின் நினைவரங்கில் நிற்கும் போது மனம் சஞ்சலப்படுகின்றது.எனக்கு அவர் க.பொ.த சாதாரன தரத்தில் எண் கணிதம் கற்பித்தவர்.
முகம்மதுத்தம்பி நௌபலின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது முதலாவது தொகுதியான மாம்பழக் கொச்சியை விட இந்த மிதக்கும் கனவுகள் ஒரு படி மேம்பட்டிருப்பதை இதை வாசிக்கின்றவர்கள் உணரலாம்.கவிஞர் நௌபல் அவர்களின் இந்தத் தொகுதி தயாரிக்கப்பட்ட விதத்திலும் முதல் தொகுதியை விட உயரந்திருக்கிறது.
ஓரு நிருவாக சேவை அதிகாரியாக இருந்து கொண்டு இக்கவிஞர் எத்தனை துறைகளில் ஈடுபட்டிருக்கின்றார் என்று யாரும் வியக்கத் தேவையில்லை. எறும்புக்கு சோர்வு தெரியாது அது இரை தேடிக் கொண்டே இருக்கும்.
யுத்தமுனையில் கவிதைகள் பிறக்கவில்லையா ? தூக்கு மேடைக்குப் போனவன் கவிதைகள் பாடவில்லையா ? கவிதை வேகாட்டிலும் வெப்புசாரத்திலும்தான் அதிகமதிகம் ஊறும் கவிஞர் நௌபல் அவர்களின் இந்தத் தொகுதியிலும் பல வெப்புசாரங்களும் வேக்காடுகளும் உள்ளன.
தன் அவஸ்தைகளைப் படைக்கத் தெரிந்தால் ஒருவனுக்கு மனைவி தேவையில்லை அது நிவாரணியாகிவிடுகிறது படைப்பு தெய்வீகம் அதைத் தூ}ய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் படைக்கப்படைக்கத்தான் ஒருவனுக்கு படைப்பாற்றல் விரிகிறது இதை நௌபல் இடத்திலும் காணக்கூடியதாக ஈருக்கிறது.
எழுத எழுத கை திருந்தும் என்பதைவிட கவிதை திருந்தும் என்றும் எடுத்துக் கொள்ளலாம் கவிதை பற்கள் உள்ளது அதை சரியாகக் கையாளாவிட்டால் கவிஞனின் கையைக் கடித்து விடும் இப்படி கவிதையால் கடிக்கப்பட்ட பலரை நாங்கள் கண்டிருக்கிறோம் நௌபல் அவர்களின் சிரிப்பில் இருக்கின்ற தூய்மையைப் போல இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கவிதைகளிலும் தூய்மை தெரிகிறது.
சில கவிதைகள் ஏனோ குறைகலோடு திரிகின்றன பாலும் பழமும் ஊட்டி கவிதையின் பசியைத் தீர்க்க முடியாது நம்மை நாம் ஊட்ட வேண்டும் இனிய சபையோர்களே பல ஆராத்திகளை குத்தி வைத்த மாதிரி இருக்கும் இந்த சபையில் நின்று கதைக்க உதவியதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவனை நாட நாட நம் படைப்பும் நமக்குத் தெரியாமல் துளிர் விடுகிறது நாம் வாசிக்கும் சஞ்சிகையாக இயற்கையைக் கொள்ள வேண்டும்.