வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி குணதிலக்க காணாமல் போனமை தொடர்பாக ஒரு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒரு ஞாயிறு தேசிய பத்திரிகையில் கடந்த வாரம் வெளியான 'புதையல் தோண்டுதல் தொடர்பாக ஒரு வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் பொலிஸ் அதிகாரிக்கு என்ன நடந்தது, ஜனாதிபதி மாமா தயவுசெய்து எமது தந்தையைக் கண்டுபிடித்துத் தாருங்கள்' என்று தலைப்பிடப்பட்ட காணாமல்போன பொலிஸ் அதிகாரியின் பிள்ளையின் கூற்றைப் பார்வையிட்டதன் பின்னரே ஜனாதிபதி பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி குணதிலக்க கடந்த ஒகஸ்ட் மாதம் 07ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அப்பத்திரிகை அறிக்கை தெரிவிக்கின்றது. இது தொடர்பாக ஒரு விசேட விசாரணையை உடனடியாக மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.
