முன்னாள் இலங்கை கிரிகெட் அணியின் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிகெட் அணியின் வீரர்களான குமார சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் நிட்டம்புவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் தனது விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு தெரிவித்துள்ளதாவது;
குமார சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்காமல் நீண்ட காலம் அணியில்நிலைத்திருந்தனர். இதனால் அணி பலவீனமடைந்ததாக அர்ஜுன ரணதுங்க குற்றஞ்சட்டியுள்ளார்.
“இன்று வீரர்களின் ஒழுக்கம் முற்றாக சீர்குலைந்து காணப்படுகிறது. எனது கிரிக்கட் இறுதி பகுதியில் நான் நான்காம் இலக்க வீரராக களமிறங்கினேன். பின்னர் 07 ஆம் இலக்கத்திற்கு நகர்ந்தேன். இது இளம் வீரர்களுக்கு தமது இடங்களை நிலை நிறுத்திக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே ஆகும். ஆனால் அண்மையில் சங்ககார மூன்றாம் இலக்க வீரராக தொடந்தும் களமிறங்கினார். மஹேல ஜெயவர்தனவும் அதேபோன்று நான்காம் இலக்க வீரராகக் களமிறங்கினார். அவர்கள் இளம் வீரர்களுக்கு இந்த இடங்களுக்கு வர அனுமதிக்கவில்லை”
“ஆனால் நான் வீரர்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை. நான் சாடுவது நிர்வாகிகளியே, முன்னால் இடைக்கால நிர்வாக உறுப்பினர்களையே. ஒரு சில தனி வீரர்களை திருப்திப்படுத்தவே அவர்களின் தேவையாக இருந்தது. இதன் விளைவாக எமக்கு பல வெற்றிகளை இழக்க நேர்ந்தது. ஆகவே அனைத்து வீரர்களுக்கும் நாட்டுக்காக விளையாடுவதை முன்னுரிமைப்படுத்தி விளையாட ஏற்றுக்கொள்ள ஒரு கொள்கை வகுக்கப் போகிறோம்” என அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கட் சபை தலைவரை தெரிவு செய்யும் தேர்வில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பதாக அர்ஜுன ரணதுங்ககுறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் கிரிகெட் தொடர்பாக தேவையற்ற விடயங்கள் நிறைய நடைபெற்றுள்ளன. இவைகளை நிறுத்தி கிரிகெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென நான் நினைக்கிறேன் எனவும் அவர் சுட்டிக்காடியுள்ளார். (நு|ஸ)
