றியாஸ் ஆதம்-
2015 ஆம் ஆண்டிற்கான அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி (2015.09.06) இன்று ஞாயிற்றுக் கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியின் போது காலை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்து சிறப்பித்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது அம்பாரை பிரதேச செயலக அணி மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் 81 புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தினையும், தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலக அணி 54 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தினையும் தனதாக்கிக்கொண்டது. இன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி அதிகூடுதலான புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் மாலை நடைபெற்ற இறுதிப்போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிக்ழ்வுகளின் போது அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெஹ் எம்.ஐ அமீர் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.






