டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் எழுத்துக்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளார்.
வெளியீட்டு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘மகாத்மா காந்தியைப் போல தொலைநோக்கு சிந்தனை கொண்டவரை காண்பதே அரிது.
அவரது சிந்தனையில் உருவான பல்வேறு கருத்துக்களை இந்த சமுதாயத்தினர் மட்டுமல்லாது, பின்வரும் சந்ததிகளும் தெரிந்து கொள்ள ஏதுவாக அவரது எழுத்துக்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
மேலும் ‘படிப்பறிவால் வழக்கறிஞராக இருந்த அவர் தன் துறை மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரம் தொடங்கி மதம் வரை அனைத்து துறைகளைப் பற்றிப் பேசும் ஞானத்தோடும் இருந்தார்.
அவரது படைப்புகளை இளம் தலைமுறையினர் படித்துப் பார்த்தால் அவர் ஆயுதமாக கையாண்ட உண்மை, அறநெறியும் தான் நிற்கும். அவரது இந்தத் தன்மைதான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையரை விரட்டியடித்தது. உலகின் பல நாடுகளையும் அறப்போராட்டம்தான் வெல்லும் என நம்பவைத்தது’ என்று ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் காந்தியின் அத்தனை வேலைப்பாடுகளும் 100 தொகுதிகளாக்கப்பட்டு இரண்டு டி.வி.டி.-களில் வெளியிடப்படும். அவற்றின் இந்திப் பதிப்பும் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை இணையத்திலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1994ஆம் ஆண்டு தனது அமைச்சகத்தின் கீழ் பதிப்பக பிரிவு இருந்தபோது, காந்தி தொடர்பாக சேகரிக்கப்பட்ட அவரது அனைத்து வேலைப்பாடுகளையும் இணைத்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக பதிப்பாக்கப் பிரிவு வெளியிட்டதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதேபோல் டிஜிட்டலிலும் அவரது படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.