இஸ்மாயில் முபாறக் -
நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றியே தவிர என்னுடைய வெற்றிகிடையாது. இந்த மக்களுக்கு நான் வழங்கி வரும் சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கான வெற்றியாக அமையும். அந்த வெற்றியை மக்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிடுவேன் என கொழும்பு மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் வேட்பாளரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான பெரோஸா முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மோதரையில் நேற்று தனது தேர்தல் பிரசார அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நான் 30 வருடங்களாக கொழும்பு மக்களுக்கு சேவை செய்து வருகின்றேன். ஆனால், ஒருபோதும் நான் அரசியலில்ஈடுபட விரும்பவில்லை. காந்தா சவிய அமைப்பின் உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தியதாலேயே நான் அரசியலில் குதித்தேன்.
இருந்தாலும்,இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை முழுமையாக மக்களிடம் ஒப்படைத்துவிடுவேன்.அந்த வெற்றி மக்களுக்கு உரியது.அதைக் கொண்டு மக்களுக்குப் பூரணமான சேவைகளை வழங்குவேன்.
எவ்வாறாகினும், நாம் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடமேற்றக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக்கட்சியால் மாத்திரம்தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவும் மூவின மக்களை ஒற்றுமைப்படுத்தவும் முடியும்.
எனக்கு வாக்களிக்கும் மக்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வாக்களிக்க வேண்டும். ஊழல், மோசடியற்றதலைவர் அவர். அப்படிப்பட்ட ஒருவரால்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.
எனது வெற்றி எப்படி இந்தக் கொழும்பு மக்களின் வெற்றியாக அமையுமோ அதேபோல், ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி முழு நாட்டு மக்களினதும் வெற்றியாக அமையும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

