முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதோருக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அனுமதியுடன் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது தேர்தல் பிரசாங்களை முன்னெடுப்பது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.
தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியுடன் வீதி நாடகத்தை பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியும் என்று பிரதி தேர்தல்கள் ஆணையாள் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேட்புமனுவை தாக்கல் செய்யும் நேரத்திலேயே சொத்து விவரங்களையும் கையளிக்க வேண்டும். வேட்பாளர்களில் பலர் இன்னும் அந்த விவரங்களை இன்னும் கையளிக்கவில்லை. அவ்வாறு கையளிக்காதவர்களுக்கு வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பாரிய டிஜிட்டல் திரைகளை, கட்சிகாரியாலயத்தில் மட்டுமே காட்சிபடுத்த முடியும் என்றும் ஏனைய இடங்களில் காட்சிப்படுத்தினால் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இம்முறை வேட்பாளர்களாக இருந்தால் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியுடன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
