சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சங்கத் தலைவர் எஸ்.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், கரையோரம் பேணல் திணைக்களத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோகுலதீபன், கிராம சேவை உத்தியோகத்தர் நிலாம்சன் குருஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விவேகானந்தன், பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ்.தயாளன், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் பத்து இலட்சம் ரூபாய் மற்றும் மக்கள் பங்களிப்பு இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது அரசியல் பணி மற்றும் சமூக பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பத்து வருடமாக வாகரை பிரதேச செயலாளராக கடமையாற்றிய பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி மற்றும் அண்ணாவியார் செல்லத்தம்பி, சமாதான நீதவான் ப.கதிரமலை ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பால்ச்சேனை கிராமத்தில் வசிக்கும் வறிய பெண்ணின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் முகமாக சுயதொழில் உதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சிறுதொகைப் பணத்தினை வழங்கி வைத்தார்.



