நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக்கழகம் தனது 23வது வருட நிறைவையொட்டி இரண்டாவது முறையாக நடாத்திய மாபெரும் மின்னொளி உதைபந்துப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த (18) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் சோண்டஸ் மற்றும் சம்மாந்துறை றோயல் மெட்ரிட் அணிகள் மோதிய இவ்விறுதிப்போட்டியின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதி நிமிடம் வரை இவ்விரு அணிகள் சார்பாக எந்த கோள்களும் செலுத்தப்படாத நிலையில் இறுதியில் பெனால்டி முறைமூலமாக 2:0 என்ற கோள் கணக்கு வித்தியாசத்தில் சம்மாந்துறை றோயல் மெட்ரிட் அணி சம்பியனானது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 15,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கோப்பையும், தோல்வியுற்ற அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கோப்பையும் வழங்கி வைக்கப்பட்டது.
சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.பி. நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும், சுகாதார அமைச்சின் தேசிய நோய்த்தடுப்புப்பிரிவின் பணிப்பாளருமான டாக்டர் ஏ.எல். பரீட், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.எம். றியாஸ், சட்டத்தரணிகளான ஏ.எம். நசீல், ஏ. றியாஸ் ஆதம் உள்ளிட்ட முன்னாள் உதைபந்து அணிகளின் சிரேஷ்ட வீரர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டதோடு சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் ஏ.எல். பரீட் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், ஞாபகச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை இந்த மின்னொளி உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கதாகும்.