சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து கூட்டாட்சி அமைத்து 03 மாத காலம் சென்ற நிலையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும்,கூட்டாட்சி தொடர்பாகவும் சந்தேகம் தெரிவித்து நல்லாட்சிக்கான கொள்கையை சரியாக வழி நடத்துமாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனிநபர் பிரேரனையை சமர்ப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னமால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சிக்கான நிதிக் கொள்கை அமுல்படுத்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரனை மீதான விவாதம் கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலை காரணமாக இனங்களுக்கிடையே சந்தேகங்களும், பகை உணர்வுகளும் விதைக்கப்பட்ட சூழ்நிலையில்தான் கிழக்கு மாகாணத்தின் 1வது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி கடந்த 2008ல் உருவாகியது.
முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரகாந்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகாண ஆட்சியில் முடிந்தளவு இனங்களுக்கிடையில் அறுந்து போய் இருந்த இன ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன், கிழக்கில் வரலாற்று அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டோம்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக மூவின மக்களின் இன ஒற்றுமைக்கு வித்திட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்வதனால் மாகாண சபையின் செயற்பாடுகளில் மூவின மக்களும் நம்பிக்கை வைக்கும் நிலை உருவாகியது. இந்த நல்லதொரு சூழ்நிலையை பெரும் தியாகங்களுடன் உருவாக்கினோம். இவ்வாறு பெரும் தியாகத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமையை தற்போதைய கூட்டாட்சியின் கீழ் நடைபெறும் சில தவறான செயற்பாடுகளினால் சமூகங்கள் மத்தியில் சந்தேக நிலைமையை உருவாக்கியுள்ளது. எனவே, கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.
இல்லையெனில் எதிர்காலத்தில் அமைய இருக்கும் கிழக்கு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளும், சமூகங்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்க சந்தர்ப்பங்களை வழங்கியதாக அமைந்துவிடும்.
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வடமாகாண சபை 01 வருடத்திற்கு 06மில்லியன் அபிவிருத்திற்காக வழங்கி வருகிறது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக இந்த வருடம் 05 மில்லியன் வழங்குமாறு வரவு – செலவு திட்டத்தில் கோரிக்கை விடுத்தோம். அதில் 04 மில்லியன் நிதி ஒதுக்கித்தருவதாக சபையில் முதலமைச்சரினால் தெரிவிக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டு வேலைத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியக் கடதாசியின் ஊடாக முதலமைச்சராக்கினோம்.
அவரின் செயற்பாட்டால் நம்பிக்கை இழந்ததையடுத்து வெளிப்படையாக கிழக்கு மாகாண ஆளுனரை சந்தித்து முதலமைச்சருக்கு நாங்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றோம். அதன்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை மூத்த தலைவர் என்ற அடிப்படையில் சந்தித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமக்கு செய்த நயவஞ்சகத்தனத்தை விளங்கப்படுத்தினோம். இது அனைத்தும் வெளிப்படையாக நடைபெற்ற நிகழ்வுகளாகும்.
மஹிந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்த கட்டிடங்களை அண்மையில் திறந்து வைக்க அட்டாளைச்சேனைக்கு வருகை தந்த முதலமைச்சர் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரான தன்னை இல்லாமல் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து சதி செய்ததாக முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத உணர்வை தூண்டும் முகமாக முதலமைச்சர் பேசியுள்ளார்.
முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்து அவரின் நயவஞ்சக செயற்பாட்டால்தான் நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்தோம். நாங்கள் கொள்கைக்காக அரசியல் செய்பவர்கள். தலைவர்களான அஷ்ரப் மற்றும் அதாஉல்லாவின் வழிகாட்டலில் செயற்படுகின்றவர்கள். அரசியலில் இரட்டை வேடம் போடுவதில்லை. என்றும் பதவிக்காக ,பட்டங்களுக்காக சோரம் போக மாட்டோம் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அன்று ஆளுங்கட்சியின் அமைச்சராகவும், அமைச்சரவை பேச்சாளராகவும் கடமை புரிந்த நான் அன்றைய கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்களையும், செயற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவித்தேன்.
முஸ்லிம் காங்கிரஸூம் , தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து கூட்டாட்சி உருவாக்கப்பட்டு 03 மாதங்கள் சென்ற பின்னும் இதுவரை கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிவரவில்லை.
அமைச்சரவை தீர்மாணங்களும் வெளியே வரவில்லை. வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆளுங்கட்சியினர்களுக்கே விபரங்கள் தெரியாது என்ற நிலமை உருவாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுப் பொறுப்பாக இருந்து செயற்பட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாண கூட்டாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கண்கானிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளது. நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்த போதிலும் கடந்த 03 மாத நடவடிக்கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரியாமல் நடந்துள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக்காலம் நீண்ட காலம் உள்ளது என நினைத்துக் தவறாக செயற்படுகின்றனர். இந்த வருடம் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 1300மில்லியன் ரூபா நிதியில் இதுவரை 80 மில்லியன் ரூபா மாத்திரமே கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆண்டினுடைய செயற்பாடுகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கையில் பாரிய பிண்ணடைவு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பெறவேண்டிய பாரிய பொறுப்பு ஆளுங்கட்சியினருக்கு உள்ளது என குறிப்பிட்டார்.(ந)
