ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்த மக்களை, தற்போது வரையில் ஏமாற்றிய ரணில் உட்பட அரசாங்கத்தை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் காணப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு உயர்ந்துள்ளதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தான் “மைத்திரிக்கு பிழைத்த இடம்” என்ற தலைப்பில் தற்போது ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க தினத்தை கோரும் விமல் வீரவன்ஸ
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை விவாதிக்க விசேட தினம் ஒன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அஞ்சவில்லை என்றால் தயவு செய்து அதற்கு தயாராகுமாறும் அவர் கேட்டுள்ளார்.
முடிந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்று காட்டுங்கள் என சவால் விடுக்கின்றேன். அன்னப் பறவைக்கு ஏமாந்து கொக்குக்கு வாக்களித்த மக்களின் நிலைப்பாடே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை காட்டுகிறது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்தியவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதாகவும் அதிகாரத்திற்கு வருவதற்காக அரசாங்கம் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதனால், எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருப்பதாகவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 6 அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான இப்படியான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை என்று சத்தியக்கடிதத்தை பெற்றார். அதேபோன்ற நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.
அறிந்த வரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அப்படியான சத்தியக்கடிதங்களை வழங்கவில்லை எனவும் எவராது அப்படியான செயற்பாட்டை மேற்கொண்டால், அவர் நாட்டை விட்டுச் செல்ல எதிர்பார்த்திருப்பவராக இருக்கக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
