ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்த சச்சிதானந்தம் மதிதயன் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மிலேட்சத்தனமாக சுட்டுக் கொல்லப்படடிருப்பது வேதனையானதும், கண்டிக்கத்தக்கதுமாகும் என மாகாண சுகாதாரத்துறை, சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கண்டனந் தெரிவித்துள்ளார்.
சச்சிதானந்தம் மதிதயனின் படுகொலை குறித்து கிழக்கு மாகாண சுகாதாரத்துறை, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சச்சிதானந்தம் மதிதயன் ஒரு சிறந்த நற்பண்புகள் கொண்ட சமூக சேவை உத்தியோகத்தராவார். எப்போதும் தமது கடமையில் கண்ணாய் இருந்து நற்பணியாற்றியவர்.(இதற்குச் சிறந்த உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மதிதயனின் கொலையைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்). இவர் கடந்த 26ந் திகதிஅவரது சொந்த ஊரான மண்டுPரில் வைத்து பட்டப்பகலில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மனிதகுலத்திற்குப் பொருந்தாத ஒரு மிருகத்தனமான செயலாகும்.
மனச்சாட்சியுள்ள எந்த நல்ல மனிதனாலும் இவ்வீனச் செயலை அங்கிகரிக்க முடியாது. கொலைக் கலாச்சாரம் ஒழிந்து, நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள இக்காலகட்டத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்து, தமிழ் பேசும் மக்களைச் சீரழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் உபாயமாகவே கொலையாளிகளின் செயல் அமைந்துள்ளது. எனவே, இவ்வாறான அரச உத்தியோகத்தர்களைப் பயமுறுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்க முடியாது.
அமரர் மதிதயனின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இக்கொலையாளிகள், கொலைக்கான காரணங்களைக் கண்டறிந்து, கொலையாளிகள் எத்தரப்பினராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனை வழங்குவதற்கு சட்டத்துறை சார்ந்த அனைவரும் தமது பணிகளை மிகத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
