பி.எம்.எம்.ஏ.காதர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். அவரின் மறைவுக்குப் பின்னர் புதிய தலைமை மக்கள் நலனை விட்டு விட்டு தனது நலனிலேயே முழு அக்கறையும் செலுத்தி வருகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.
மருதமுனையில் நேற்று (07-05-2015) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பல தியாகங்களுக்கு மத்தியில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மக்கள் மத்தியில் கொண்டு வந்தார்.
இக்கட்சியின் வருகையால் பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. இருந்த போதிலும் மக்கள் நலனுக்காகவே அவரின் பணிகள் தொடர்ந்தன இதனால் முஸ்லிம் சமூகம் மாத்திரமன்றி தமிழ், சிங்கள சமூகங்களும் பல நன்மைகளைப் பெற்றன ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் வந்த தலைமை முஸ்லிம் சமூகம் பயன்படும் படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை.
தன்னையும், தனது குடும்பத்தையும் வளர்த்துக் கொள்வதிலேயே அவரது அரசியல் பயணம் தொடர்கின்றது. கடந்த ஜனாதிபத் தேர்தலுக்கு முன் கரையோர மாவட்டம் தரவில்லை என்பதற்காக மஹிந்த அரசை விட்டு வெளியேறிய முஸ்லிம் காங்கிரஸ் இன்று மைத்திரியின் ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புக்ளை பெற்றுக் கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.
அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று சொல்லி தம்பட்டம் அடிப்பவர்கள் கல்முனை பிரதேச செயலகத்திற்கு ஒரு முஸ்லிம் பிரதேச செயலாளரை நியமிக்க முடியாதவர்களாக இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நடைபெற இருக்கின்ற தேர்தல்கள் நல்ல பாடத்தைப் புகட்டும் என்பதில் சந்தேகமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.(ந)
.jpg)