கல்வி எவ்வளவு தூரம் வளர்க்கப்படுகின்றதோ அப்போது தான் எமது மக்கள் நிரந்தரமான சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் பெற்றவர்களாக இருப்பார்கள். பூரண கல்வி வளர்ச்சியின் மூலமே எமது சமுகம் நிரந்தர சுதந்திரமும், அபிவிருத்தியும் பெறும் என கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநாகர எல்லைப் பிரதேசமான மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது சமுகம் கல்வி நிலையில் மிகவும் பின்தள்ளப்பட்டு இருக்கின்றது. சமுக சேவைகள் மேற்கொள்ளும் அமைப்புகள் சமுக சேவை எனும் போது முதலில் கல்விக்கு இடம் கொடுத்து அதனை வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது மாணவர்கள் கற்பித்தலில் முன்கொண்டு வரப்பட வேண்டும் பௌதீக வளங்களை முன்னேற்றுவதாக மாத்திரம் எமது சேவைகள் இருந்து விடக்கூடாது. கிராம அமைப்புகள் ஒவ்வொன்றின் மூலமும் கல்வி நிலையங்களை உருவாக்கி எமது சிறார்களை கல்வியில் எவ்வளவிற்கு ஊக்கப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு முன்னேற்ற வேண்டும். அதற்கு எம்மாலான முழு உதவிகளையும் மேற்கொள்வோம்.
கல்வி எவ்வளவு தூரம் வளர்க்கப்படுகின்றதோ அப்போது தான் எமது மக்கள் நிரந்தரமான சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த விடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் எடுப்பதோடு சமுக சிந்தனையாளர்களும் இளைஞர்களும் இன்னும் கவனம் எடுக்க வேண்டும்.
ஏனெனில் கல்வி தான் எமது சமுகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற விடயமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
