மத ஒற்றுமைக்காக காஞ்சி சங்கராச்சாரியாருடன் ஆலோசனை நடத்த ஜனாதிபதி சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுடனும், அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவையும் வளர்த்து வருகிறார். இலங்கையில் மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். தமிழர்கள் இந்துக்களாக உள்ளனர். எனவே, இரு சமுதாயத்தினரையும் ஒற்றுமைப்படுத்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் ஆலோசனை நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் ஊடக துறை கூடுதல் செயலாளர் சமன் அதாயுதாகெத்தி ஆகியோர் அடங்கிய குழு கடந்த வாரம் புதன்கிழமை காஞ்சீபுரம் சென்றனர். அவர்கள் சங்கராச்சாரியாரை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளனர். இந்த தகவலை இந்து அறநிலைய விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சங்கராச்சாரியாருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் மூலம் அவரை இலங்கை அரசு தொடர்பு கொண்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக ஊடக கூடுதல் செயலாளர் சமன் அதாயுதாகெத்தி கூறும் போது;
இந்து மற்றும் புத்த மதத்துக்கும் இடையே மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சங்கராச்சாரியை சந்தித்து நாங்கள் இலங்கை கோவில் குழுக்கள், பூசாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் படியும் அவரிடம் கேட்டுக்கொண்டோம். அதற்கு விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.(ந)
