முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவிக்கின்றார்கள்.
இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் எதிர்வரும் 06 ஆம் திகதி முக்கிய சந்திப்பு இடம்பெற உள்ள நிலையில் இவ்விதம் எதிர்வு கூறப்படுகின்றது.
இச்சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சம்பந்தப்படுத்தி இரு நிபந்தனைகளை முன்வைப்பார் என்று சொல்லப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற சபையில் இடம்பெற சம்மதிக்க வேண்டும், இக்கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்க அனுமதிக்கப்பட வேண்டும் ஆகியனவே இந்நிபந்தனைகள் என்கின்றார்கள்.
இருவருக்கும் இடையிலான பிணக்குகளை இல்லாமல் செய்கின்றமைக்கும், இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளிலும் ஒன்றுபட்டு செயற்படுகின்றமையை உறுதிப்படுத்துகின்றமைக்கும் ஆக இடம்பெறுகின்ற இச்சந்திப்பில் இரு கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வாய்ப்புகளே காணப்படுகின்றன.
ஏனென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்து உள்ள காரணத்தால் மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது கனவானாக நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, சுதந்திர கட்சி ஆகியவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான புரட்சிக் குழு தனித்து தேர்தல் கேட்கின்ற பட்சத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, சுதந்திர கட்சி ஆகியவற்றின் வாக்குகள் பிளவுபட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்து விடும் என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்கு அறிவார்.
இதே நேரம் மஹிந்த ராஜபக்ஸவால் முன்வைக்கப்படக் கூடிய கோரிக்கைகள் தொடர்பாக சுதந்திர கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவே இறுதித் தீர்மானம் எடுக்கும் என்று எதிர்க் கட்சித் தலைவர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்து உள்ளார்.
இவையெல்லாம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் சாதகமான விடயங்களாக அமையப் பெற்று உள்ளன.(ந)
