பாராளுமன்றத்தில் 42 உறுப்பினர்களைக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுமென முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன செய்தியாளரொருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கூறியதாவது.
நாங்கள் ஏற்கனவே பொது பாதுகாப்பு மற்றும் கிறிஸ்துவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவி தில்ருக் ஷி விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதும் இன்னும் சில வாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பல வாரங்களுக்கு முன்னர் பராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பிரேரணை மீதான விவாதம் இன்று வரை விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நீங்கள் சமர்ப்பித்துள்ள சமர்ப்பிக்கப்போகும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டலஸ் அழகப்பெரும எம்.பி. அது எமது கைகளில் இல்லையென தெரிவித்தார்.
