கண்டி அஸ்கிரிய பெளத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் பூதவுடல் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் அரச மரியாதையுடன் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
அஸ்கிரிய உபாலி தேரர் ஞாபகார்த்த கட்டிடத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மகாநாயக்க தேரரின் பூதவுடலை இன்று நண்பகல் 12 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 1.00 மணியளவில் பூதவுடல் விஷேட பேழையில் அலங்கரிக்கப்பட்ட விஷேட ரத பவனியில் கற்கே வீதி டி.எஸ். சேனாநாயக்க வீதி - தலதா வீதி- புஸ்பதான மாவத்தை வழியாக அஸ்கிரிய பொலிஸ் மைதானத்திற்கு எடுத்து வரப்படும்.
இங்கு வரும் போது வான் ஊர்திகளிலிருந்து பூதவுடலுக்கு மலர்கள் தூவப்படும். இதனையடுத்து 17 பீரங்கி தீர்க்கப்பட்டு முழுமையான அரச மரியாதைகளுடன் உறவினர்களால் தகன கிரியைகள் நடத்தப்படும்.
இதேவேளை கண்டி நகரிலும் சுற்றுப் புறங்களிலும் பிரதேச ஊர்வலம் செல்லும் வீதிகளிலும் மஞ்சள் நிற கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் அரச கட்டிடங்களில் அரைக்கம்பங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உட்பட கண்டி இந்து மன்ற பிரதி நிதிகள் ஆலய நிருவாகத்தினர் தமிழ் வர்த்தக சங்கத்தினர் கண்டி நகர பள்ளிவாசல்களின் முஸ்லிம் பிரமுகர்கள் வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் மகா நாயக்க தேரரின் பூதவுடலுக்கு தேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நன்றி வீ.கே.