நல்லாட்சி எனப் புகழ்ந்துகொள்ளும் தேசிய அரசாங்கம் தற்போது சர்வாதிகாரத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. மக்களின் ஆதரவும் பாராளுமன்ற ஒத்துழைப்பும் இன்றி தனித்து முடிவெடுக்க பிரதமர் தயாராகி விட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு முரணாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பிரதமருக்கு எதிராக எச்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அதேபோல் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டும் இருக்கின்றோம்.சரியான வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியை கவிழ்ப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பின் போதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது
அரசியல் அமைப்பின் மாற்றம் கொண்டு வருவதில் சரியான விதிமுறைகள் உள்ளன. 19 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் எம்மிடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் 19இல் ஜனாதிபதி முறைமையினை மட்டுமே மாற்றியமைத்து ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கும் செயற்பாட்டினை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஜனாதிபதி முறைமையின் மாற்றத்துடன் சுயாதீன ஆணைக்குழுவின் சுதந்திரத்தினை வலியுறுத்துவதுடன் தேர்தல் முறைமையில் மாற்றத்தினையும் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு இரண்டு விடயங்களும் கொண்டு வரப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவது சரியானது. அதை விடுத்து சுயநலமான 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஒரு போதும் நாம் ஆதரவு வழங்கும் எண்ணம் இல்லை.
ஆயினும் இன்று தேசிய அரசின் பாதை மாறிக் கொண்டு வருகின்றது. வாய் திறந்தவுடன் நல்லாட்சியையும் ஜனநாயகத்தினையும் பேசும் தேசிய அரசாங்கம் இன்று சர்வாதிகாரத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. மக்களின் ஆதரவும் விருப்பமும் இல்லாது சட்ட மூலங்கள் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதும் பாராளுமன்றத்தின் ஆதரவின்றி செயற்படுவதும் சர்வாதிகார ஆட்சிக்கான இலட்சினைகளே.
அதையே இன்று ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. இவ்விடயங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இடம் கொடுக்கின்றமையே ஆச்சரியமாக உள்ளது.
அதேபோல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் இப்போது ஒன்றும் எம்மால் குறிப்பிட முடியாது. கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்ட வீரர் சொல்லிக் கொண்டு துடுப்பெடுத்தாட மாட்டார். பந்து எவ்வாறு வருகின்றதோ அதற்கு அமையவே அடியும் பலமாக அமையும். அதே போலத்தான் பந்து சரியாக வரும்வரை காத்திருக்கின்றோம். சந்தர்ப்பம் கிடைத்ததும் பாராளுமன்றத்தின் ஆட்சியினை கவிழ்ப்போம் எனவும் குறிப்பிட்டார்.
