சக்கி அஹமட்-
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் சில வருட காலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையினால் தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவுடன் இயங்கும் 1சீ தரமுடைய இப்பாடசாலையில் சுமார் 850 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். குறிப்பாக ஆரம்பப் பிரிவுக்குறிய ஆசிரியர் பற்றாக்குறையே தொடர்ந்தும் நிலவிவருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பப் பிரிவிற்கு 15 ஆசிரியர்கள் தேவையாக இருந்தும் 11 ஆசிரியர்களே தற்போது உள்ளனர்.
இதனால் தரம் மூன்றில் மூன்று வகுப்புக்களுக்கும், தரம் ஐந்தில் ஒரு வகுப்பிற்கும் பொறுப்பாசிரியர்கள் இன்மையால் அவ்வகுப்பு மாணவர்களின் ஆரம்பக் கல்வி பாதிக்கப்பட்டு வருகின்றது. இது விடயமாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்வி நலன் கருதி பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் என்றவகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
.jpg)