எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டு வருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பொது வேட்பாளர் விவகாரம் குறித்தும் சந்திரிகா பண்டாரநாயக்கவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடியுள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை இன்றைய தினம் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுடன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களாகவே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கப்போகின்றார் என்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம் இது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போது இவ்வாறு வதந்திகள் பரவுவதாக கூறிவிட்டு சிரித்தவாறு சென்றுவிட்டார்.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல் நேற்று வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


0 comments :
Post a Comment