எல்லைப் பகுதியில் கடும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. எல்லையில் துருக்கி ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எல்லையருகே உள்ள கொபானி நகரை ISIS இயக்கத்தினர் நெருங்கி விட்டது.
தொடர்ந்து ISIS இயக்கத்தினரும், குர்திஷ் ராணுவமும் இப்பகுதியில் யுத்தம் புரிந்துவந்த நிலையில், இன்று மதியம் கொபானி புறநகரப் பகுதியில் உள்ள மலையில் ISIS இயக்க கொடி ஏற்றப்பட்டது.
அதை கொபானி நகர மக்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில், அதே புறநகரப் பகுதியில் அந்த மலை அருகே உள்ள பில்டிங் ஒன்றிலும் ISIS கொடி ஏற்றப்பட்டது
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, கொபானி புறநகரப் பகுதி ஊடாக ISIS இயக்கத்தினர் நகருக்கு உள்ளே வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டிலரி பீரங்கிகள் வெடிக்கும் சத்தம் நகரை அதிர வைத்துக்கொண்டு இருக்கிறது.
இன்று மதியம் அவர்களது இயக்க கொடி ஏற்றப்பட்ட கிட்டத்தட்ட அதே நேரத்தில், நகருக்குள் நுழைய முயன்ற ISIS இயக்கத்தினரை நோக்கி ஓடிவந்த குர்திஷ் பெண் ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தார்.
இதில் 10-க்கும் மேற்பட்ட ISIS இயக்கத்தினர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
கொபானி நகரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள குர்திஷ் ராணுவத்தின் (YPG) கமாண்டர் இஸ்மாட் ஷேக் ஹசன் வழங்கிய டெலிபோன் பேட்டியில், “எமது நகரை நெருங்கி வரும் ISIS அச்சுறுத்தலில் இருந்து எம்மை காப்பாற்றும்படி சர்வதேசத்துக்கு இரண்டு வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
அமெரிக்கா தலைமையிலான விமானப்படை விமானங்கள் ISIS நகர்வை தடுத்து நிறுத்த குண்டுவீச்சு நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த குண்டுவீச்சுக்களால் ஏதாவது பலன் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
ஆனால் அவர்கள் இதுவரை நகருக்குள் வரவில்லை. நாம் நகரை விட்டு வெளியேறுவதாக இல்லை. உயிரைக் கொடுத்தாவது போராட தீர்மானித்துள்ளோம்” என்றார்.
அய்ன் அல்-அராப் என அரபு மொழியில் அறியப்பட்ட கொபானி நகர் முழுமையான ISIS இயக்கத்தினரின் கைகளில் வீழ்ந்தால் இரு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலில் ஏராளமான குர்திஷ் மக்கள் கொபானி நகரை விட்டு, துருக்கி எல்லைக்குள் செல்ல தொடங்குவார்கள். சர்வதேச அழுத்தம் காரணமாக துருக்கி அரசால் அவர்களை தடுக்க முடியாது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது சிக்கலாக, ISIS இயக்கத்தினரும் எல்லைப் பகுதியை வந்தடைவார்கள்.
துருக்கி ராணுவத்துக்கும், ISIS இயக்கத்தினருக்கும் இடையே ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள நிலையில், துருக்கி ராணுவத்தால், தாக்குதல் நடத்த முடியாத நிலை ஏற்படும். இதை எப்படி சமாளிக்கப் போகிறார்களோ, தெரியவில்லை


0 comments :
Post a Comment