வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்தச் சிப்பாயை பொலிஸார் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விநாயகபுரம் பகுதியில் அதிகாலை வேளை ஒருவர் வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதனை அவதானித்த அந்தப் பெண்ணின் கணவர் அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
வீட்டாரின் அலறலைக் கேட்டு அயலவர்கள் விழித்துக் கொண்டு ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இது குறித்து பரமேஸ்வரா பள்ளிக்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்கும் பளைப் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், அந்த நபரை தாம் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் எனக் கூறிய பொதுமக்கள் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குறித்த சிப்பாய் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற சிவாஜிலிங்கம் மற்றும் சுகிர்தன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்ததுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சமூகமட்ட விழிப்புனர்வு குழுக்களை அமைத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.


0 comments :
Post a Comment