ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டினார்.
ஹங்குரங்கெத்த ரிகில்லகஸ்கட வில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
இன்று எமது நாட்டில் சிறுபான்மை மக்களின் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என்பன முழுமையாக தீர்க்கப்படாதுள்ளது. சுயதொழில் வாய்ப்பு இல்லை. விவசாயிகளின் உற்பத்திக்கேற்ப விற்பனை விலையை பெற்றுக்கொள்ள முடியவில்லை. மின்சார கட்டணம் மேலோங்கியுள்ளது. சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழ முடியாது மக்கள் திண்டாடுகின்றனர். இந்த நிலையிலிருந்து நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வினை எட்ட முடியும். இதற்காக இளைஞர், யுவதிகள் எம்முடன் கைகோர்த்து செயற்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைப்பதில்லை. பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதற்கும் அவர்கள் கல்வியை தொடர்வதற்கும் பணம் அறவிடப்படுகிறது. இலவச கல்வி முறை இன்று இல்லாது செய்யப்பட்டு அனைத்தும் பண மயமாகியுள்ளது.
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வெளிநாடுகளுக்கு சென்றி சீமெந்து குழைக்கும் தொழில் ஈடுபட வேண்டியுள்ளது. எமது அரசாங்கத்தினால் அன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்றி இளைஞர், யுவதிகள் தவிக்கின்றனர்.
நாட்டில் பொலிஸ் பாதுகாப்பு நீதி என்பன கீழ் தள்ளப்பட்டுள்ளன. சுதந்திரமாக பேச முடியாதுள்ளது. இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். சுயாதீன தர்மத்தை காப்பாற்ற வேண்டும். இவற்றுக்கான தீர்வினை பெற்றுத்தர ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே முடியும் என்றார். இதேவேளை மாத்தளை வர்த்தகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க அங்கு கூறுகையில்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என பொதுஎதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் பிரசாரமும் போராட்டமும் என்னை வெற்றி பெறச் செய்யுமென்பது உறுதியாகும்.
மாத்தளை நகரில் வீதி விஸ்தரிப்பின் போது உடைக்கப்பட்ட சுமார் 700 வர்த்தகக் கட்டிடங்களுக்கான நஷ்ட ஈட்டை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்ன் பெற்றுக்கொடுக்கும். வீதி அபிவிருத்தி விஸ்தரிப்பின் போது சொத்துக்கள் சேதமடைந்திருப்பின் அவற்றின் உரிமையாளர்களின் பெயர் பட்டியலை எழுத்து மூலம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும். எனவே அதனை பெற்றுக் கொடுப்பதற்கு பாதிக்கப்பட்டோர் முனைய வேண்டும்.
கட்சியை விட்டுச் சென்றவர்கள் மற்றும் கட்சிக்கு பயனற்றவர்கள் கட்சியின் வெற்றிக்குப் பின்னர் அவர்கள் கட்சிக்கு பயனற்றவர்களே. அவ்வாறனவர்களால் கட்சிக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.எனவே, அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள கட்சி இடமளிக்காது என்றார்.
0 comments :
Post a Comment