காஸாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கின்ற இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையையேனும் விடாது அரசாங்கமும் ஜனாதிபதியும் மௌனமாக இருப்பது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் செய்கின்ற துரோகச் செயலாகும். இது இலங்கை வாழ் முஸ்லிம்களை வேதனையடையச்செய்துள்ளது என்று மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் காஸாவில் கொல்லப்பட்டமைக்கு எதிராக எதுவும் பேசாத அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுகின்றமையானது வேதனை தருகின்ற விடயமாகும். நாம் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் கவனத்திந்கு கொண்டு வந்தபோதிலும் எவ்விதமான பயனும் இல்லை.
மேலும், அளுத்கம, பேருவளை பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று ஒன்றரை மாத காலமான பின்னும் கூட இன்னும் ஜனாதிபதி அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
கறுப்பு ஜூலையை நினைவுக்கூருவதாக பொய்யான ஒரு நாடகத்தை அரசாங்கம் அண்மையில் அரங்கேற்றியது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கறுப்புப் பட்டியை அணிந்துக் கொண்டு துக்க தினத்தை அனுஷ்டிப்பது போல ஒரு நாடகம் ஆடினர். உண்மையில் இனங்களுக்கு இடையே மோதல்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தி அரசியல் இலாபம் காணுகின்ற அரசாங்கம் இவ்வாறு நடந்தது கேலிக்கையாக உள்ளது. கறுப்பு ஜூலை என்பது போல கறுப்பு ஜூனை அளுத்கமையில் இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்பது மட்டுமே உண்மையாகும்.
சோகம் (Chogam) பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதில் பெருமைக் கொண்ட அரசாங்கம் சாதாரண பொது மக்களின் பணத்தினை வீண்விரயம் செய்தது மட்டும் அல்லாது அப்போது செய்யப்பட்ட காபட் பாதைகளை மீண்டும் உடைத்து புனரமைப்பதாக கூறுகின்றது. இதெல்லாம் என்ன நாடகம் என்று தெரியவில்லை.
வீதியோர நடைபாதைகளை பெரிதாக்கி கற்களால் அலங்கரிப்பு வேலைகள் நடைபெறுவது கூட அபிவிருத்தி அல்ல. பாதைகளில் கற்களை விநியோகிப்பவர் ஜனாதிபதியின் உறவுக்காரர் அவர் இலாபம் பெறவேண்டுமான்றே வீதியோர நடைபாதைகள் அளவில் பெரிதாக செய்யப்படுகின்றது. அதுமட்டும் அல்ல ஒருவழிப்பாதையை உருவாக்கி நேர விரயத்தை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முஸ்லிம்களை துன்புறுத்துவதோடு பள்ளிவாயல்களை உடைத்து பாவம் செய்கின்ற அரசாங்கத்துடன் சேர்ந்து சிலர் இப்தார் கொண்டாடியுள்ளனர். அல்ஹாமுஸ் முஸ்லிம் என்று கூற தகுதியில்லாத ஒருவர் இவர் சோகம்பஸ் மூலம் ஆட்களை ஆயிரம் ரூபா காசு கொடுத்து ஜனாதிபதியின் இப்தாருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது மிகவும் கேவலமான ஒரு செயற்பாடாகும்.
முஸ்லிம்களை அழித்து பள்ளிகளை உடைத்துக்கொண்டு அரசியல் இலாபம் காணும் ஒருவருடன் இணைந்து இப்தார் கொண்டாடுவது வெட்கப்பட வேண்டிய செயலாகும்.

0 comments :
Post a Comment