
ராமநாதபுரம்: போடாத ரோட்டுக்கு ஆதாரமாக, க்ராஃபிக்ஸ் மூலம் தயாரித்த புகைப்படங்களை உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த 4 அரசு அதிகாரிகளை ஆட்சியர் சஸ்பென்ட் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சடையன்குளம் கிராமத்திற்கும், கிடாக்குளம் கிராமத்திற்கும் இடையே சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 19.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சில மாதங்களில் ரோடு போடப்பட்டுவிட்டதாக கணக்கு எழுதப்பட்டு அதற்கான தொகை முழுவதும் எடுக்கப்பட்டது.
ரோடு போட்டதற்கான புகைப்படங்களும் உயர் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட ரோடு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கே புதிதாக ரோடு எதுவுமே போடப்படாமல் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே, இது குறித்து ரோடு பணிகளை மேற்கொண்ட ஒன்றிய அதிகாரிகளிடம் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், ரோடு போடாமலே போட்டுவிட்டதாக பொய்யாக கணக்கு காட்டி அதற்கான முழு தொகையையும் எடுத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும், புதிதாக ரோடு போட்டுள்ளதாக ஆதாரம் காட்ட, கம்ப்யூட்டர் மூலம் கிராஃபிக் செய்யப்பட்ட படங்களை உயர் அதிகாரிகளிடம் சமர்பித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கடலாடி வட்டார வளர்சி அலுவலர் தங்கராஜ், உதவி பொறியாளர் அருண்பிரசாத், சாலை ஆய்வாளர் அந்தோணிராஜ், ஓவர்சீயர் சாதிக்பாட்சா ஆகிய 4 பேரையும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் சஸ்பென்ட் செய்து உத்திரவிட்டார்.
0 comments :
Post a Comment