13வது திருத்தம் என்பது இலங்கையையும், தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தமாகும். இச்சட்டத்தின் படி மக்கள் வாக்குகள் மூலம் தெரிவாகும் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அச்சபைகளை கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் மத்திய அரசுக்கு உண்டு என்பதை ஆளுணர் நியமிப்பதன் மூலம் வரையறுத்தது என ஐக்கிய காங்கிரஸின் தலைவர் மௌலவி கலாபூசணம் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், அன்றிருந்த தமிழ் கட்சிகள் ஆக குறைந்தது ஆளுனர் என்பவரும் ஜனாதிபதி போல் மாகாண மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கலாம். அப்படி செய்யவில்லை. மாறாக ஆளுனர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர். அவருக்கு அடிமையாகவே மாகாண சபையும் இருக்கிறது. இந்தியாவிலும் மாநிலங்களை ஏற்படுத்தி விட்டு அம்மாநிலங்களை மத்திய அரசின் அடிமைகளாக வைத்திருக்கும் வகையிலேயே ஆளுனர் பதவி ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுனர் நினைத்தால் மக்கள் தெரிவு செய்த மாநில சபையையும் கலைப்பதற்கு சிபாரிசுசெய்யலாம். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரணானதாகும்.
ஆகவே 13வது சட்டத்திருத்தம் முழுமையாக மாற்றப்பட்டு, வடக்கு கிழக்கை இரண்டு மாகாணங்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற நிலையில் ஆளுனரும் மக்களால் தெரிவு செய்யப்படும் வகையில் 13+ கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி முன் வைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment