எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஜனாதிபதி செயலகம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 'சுரகிமு லங்கா' (Surakimu Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இன்று (10) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்வஹான் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட காலை ஆராதனை நிகழ்வில், கல்முனை பிராந்திய சிரேஷ்ட உதவி பொறியியலாளர் வீ.ரீ. சம்பந்தன் வளவாளராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில்,
மின்சார சேமிப்பு விழிப்புணர்வுகள் குறித்து மின்சாரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து, தேசத்தின் முன்னேற்றத்திற்காக எவ்வாறு பொறுப்புடன் மின்சாரத்தைப் பயன்படுத்துல் மற்றும் எதிர்வரும் விடுமுறை காலத்தில் வழங்கப்பட்ட கையேட்டினைப் பயன்படுத்தி எவ்வாறு பாடசாலை மட்ட மின்சக்தியை சேமிப்புப் போட்டியில் கலந்து கொள்ளல் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், இரவு 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலான உச்ச மின் பயன்பாட்டு நேரத்தில் மின் பாவனையைக் குறைத்தல், பயன்படுத்தாத மின் இணைப்புகளைத் துண்டித்தல், மின் அழுத்தியை ஒரே நேரத்தில் பயன்படுத்தி ஆடைகளை அழுத்துதல், குளிர்சாதனப்பெட்டியை வினைத்திறனாகப் பயன்படுத்தல் போன்ற அவசியமான ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், மின்சக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட மின்சக்தியை எவ்வாறு சேமித்தல் தொடர்பான ஆவணப்படமும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
பிரதி அதிபரும் Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் பாடசாலை இணைப்பாளருமான எம்.ஏ.எம். ஸிராஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.,




0 comments :
Post a Comment