தகவல் அறியும் கோரிக்கைக்கு கிடைத்த பலன் ; பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கையை அறிவித்த நீதிச் சேவை ஆணைக்குழு



ரிஹ்மி ஹக்கீம்-
நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள நீதிமன்றங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களில் தற்போது நிலவும் நீதிமன்ற தட்டெழுத்தாளர் (Court Typist) பதவி வெற்றிடங்கள் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு பதிலளித்துள்ளது.

கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த ஏ.எச்.ஆர்.மொஹமட் என்பவரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தினைப் (RTI) பயன்படுத்தி அனுப்பப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.

"தற்போது நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள நிறுவனங்களில் நீதிமன்ற தட்டெழுத்தாளர் பதவி வெற்றிடங்கள் 180 உள்ளன. மேலும் குறித்த பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2026 ஜனவரியில் இடம்பெறவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பதவிக்கு வெறும் 28 வெற்றிடங்கள் மாத்திரமே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிழையான தகவல் ஒன்றே பரவி வந்த நிலையில், நீதிச் சேவை ஆணைக்குழுவிலும் இது தொடர்பான விசாரணைகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே உண்மைத்தன்மையை மேற்படி ஏ.எச்.ஆர்.மொஹமட் என்பலரால் இது தொடர்பான தகவல் அறியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தகவல் அறியும் விண்ணப்பத்தினை ஏ.எச்.ஆர்.மொஹமட் கடந்த 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பித்திருந்தார்.

RTI சட்டத்தின் அடிப்படையில் தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு தொடர்புடைய அரச நிறுவனமானது 14 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டிய நிலையில், நவம்பர் 27 ஆம் திகதி வரை பதில் கிடைக்காததன் காரணமாக விண்ணப்பதாரியான மொஹமட் மேற்படி தினத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் குறித்துரைக்கப்பட்ட அதிகாரிக்கு (Designated Officer) RTI 10 ஊடாக முறையீடு செய்திருந்தார்.
எனினும் அதற்கும் இருவாரங்களாக பதில் எதுவும் கிடைக்காத நிலையில், நீதிச் சேவை ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கங்களும் இயங்காத நிலையில் டிசம்பர் 11 ஆம் திகதி ஆணைக்குழு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தகவல் அதிகாரியை சந்தித்து மேற்படி விபரங்களை தெரிவித்திருந்தார்.
நீதிச் சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் கட்டிடம் இடமாற்றப்பட்டுள்ளதால் (இலங்கை சட்டக்கல்லூரிக்கு அருகில்) இணையம்‌ மற்றும் தொலைபேசி இணைப்புக்கள் இதுவரை சரி செய்யப்படாமையே தாமதத்திற்கு காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த மொஹமட், எனினும் தற்போது தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்வதற்குரிய நாளும் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட தகவல் அதிகாரி இன்றைய தினம் (டிசம்பர் 12) அவரை தொடர்பு கொண்டு நீதிமன்ற தட்டெழுத்தாளர் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் போட்டிப் பரீட்சை விபரம் என்பவற்றை அறிவித்துள்ளதுடன், நிலைமை சீரானவுடன் மின்னஞ்சல் ஊடாக பதில் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி ஒரு சாதாரண நபர் நாட்டின் முக்கிய ஆணைக்குழு ஒன்றில் இருந்து அதுவும் அந்த அலுவலகம் தற்போது புதிய இடத்தில் சரிவர தமது செயற்பாடுகளை ஆரம்பிக்காத நிலையிலும் தேவையான தகவலைப் பெற்றுக் கொண்டமை இங்கு முக்கிய அம்சமாகும்.
எனினும் தகவல் கோரிக்கைக்கு மின்னஞ்சல் அல்லது கடிதம் ஊடாக ஒரு பதில் கிடைக்காத வரை குறித்த தொலைபேசி அழைப்பின் ஊடாக கிடைத்த பதிலை உத்தியோகபூர்வ பதிலாக கருத முடியாது என்பதுடன், விண்ணப்பதாரிக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்வதற்கு உரிமை இருக்கிறது.
மேற்படி பதவி வெற்றிடங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய பிழையான தகவல்கள் காரணமாக சிலர் நீதிமன்ற தட்டெழுத்தாளர் பதவிக்கான திறந்த போட்டிப்பரீட்சையை எழுதுவதில்லை என்றும் தீர்மானித்து இருந்ததுடன், மேற்படி நீதிச் சேவை ஆணைக்குழுவின் பதிலை மொஹமட் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை அடுத்து அவர்கள் தமது பிழையான முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :