2025 செப்டம்பர் 1 முதல் 4 வரை அனுஷ்டிக்கப்படும் இந்நிகழ்வுக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பிரிவுகளிலும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் பரந்த அளவிலான சுத்திகரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வேலைத்திட்டங்கள், பல்கலைக்கழகப் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டன. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அரசுத் துறைகளில் சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அலுவலர்களுக்கு சிறந்த பணிச்சூழலை வழங்குவதும், பொதுமக்கள் அரசுத் துறைகளைப்பற்றி நல்ல எண்ணம் கொள்ளச் செய்வதுமாகும் இந்நிகழ்வின் முதன்மை நோக்கம்.
சுற்றறிக்கையின் படி:
• தினசரி குறைந்தது இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கி அலுவலகங்களின் உள்புறம், வெளிப்புறம், மற்றும் வளாக சூழலை சுத்தம் செய்வது,
• மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது,
• பொலித்தீன் பயன்பாட்டை குறைப்பது,
• மரக்கன்று நடுதல்,
• பயன்பாடற்ற பொருட்கள், பழைய வாகனங்கள், ஆவணக் கோப்புகள் மற்றும் மின்கழிவுகளை (E-Waste) உரிய முறையில் அகற்றுவது,
• சுத்திகரிப்பு பணிகளை “Clean Sri Lanka” லோகோ உடன் அடையாளப்படுத்துவது,
எனப் பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் உள்ளக கணக்காய்வுப் பிரிவின் அறிக்கைகள் மூலம் இந்த நடவடிக்கைகளை பின்தொடர்ந்து மதிப்பீடு செய்து, காலாண்டு அடிப்படையில் முன்னேற்றத்தை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், நூலகர், நிர்வாக உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், விடுதிகளுக்குப் பொறுப்பானோர், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் என பெரும் திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதன்மூலம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் “Clean Sri Lanka” தேசிய நோக்கத்திற்கு வலுவான பங்களிப்பைச் செய்துள்ளது.


0 comments :
Post a Comment