சாய்ந்தமருது பிரதான வீதிக்கு அண்மித்ததாக பழைய வைத்தியசாலை வீதியில் ஏற்பட்ட திடீர் திருத்தவேலை காரணமாக அண்மையில் அவசர அவசரமாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தோண்டப்பட்டு திருத்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இருந்தபோதும் மக்கள் பிரதானமாக பாவிக்கும் குறித்த வீதி சரியான முறையில் புனரமைக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த திருத்த வேலைகள் இடம்பெற்றபோது வடிகான்களுக்குள் மணல் நிரம்பியுள்ளதால் அண்மையில் பெய்த மழையினால் நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை யார் புனரமைப்பது? நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, அத்தியாவசியமான இந்த வீதியை புனரமைப்புச் செய்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதியை அவர்கள் எப்போது புனரமைப்புச் செய்வர்? மூடப்பட்டுள்ள வடிகான்களை சுத்தப்படுத்துவது யார்? கல்முனை மாநகரசபை இவைகளைக் கண்டுகொள்ளுமா என்ற வினாக்கள் எல்லாம் மக்களால் கேட்க்கப்படுகின்றன.
இந்த வீதிகளை இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பயன்படுத்துகின்றனர்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதியை கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் காபட் வீதியாக சீரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கியிருந்த போதிலும் சில அரச நிறுவனங்களின் பொடுபோக்கான செயல்களினால் மழை காலங்களில் பொதுமக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.
இந்த விடயத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை உரிய அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் துரிதகதியில் கவனம் செலுத்தி வீதிகளை மக்கள் பாவனைக்கு உகந்தவகையில் திருத்தியமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
0 comments :
Post a Comment