அரச அங்கீகாரத்துடன் தேசிய கலாசார விழாவாக கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்று விழா ஏற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்காளான எம்.எஸ்.எம்.நிசார், எம்.எஸ்.எம்.ஹாரிஸ், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோருடன் கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா என்பவற்றின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் கொடியேற்று விழாவுக்கான முன்னாயத்த ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக கல்முனை மாநகர சபையின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திண்மக்கழிவகற்றல், மின்னொளியூட்டல் மற்றும் பொது வசதிகள், அலங்கார ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தையும் துரிதமாக முன்னெடுத்து, நிறைவு செய்வதற்கும், கொடியேற்ற விழா நடைபெறுகின்ற 12 நாட்களும் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய திண்மக்கழிவகற்றல் மற்றும் பொது வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் யாவும் இதன்போது பரிசீலிக்கப்பட்டதுடன் அவற்றை சீராக நிறைவேற்றுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாசார விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது வருடாந்த கொடியேற்று விழா எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment