நாட்டிலே எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையில் சேதனப்பசளை மாத்திரமே பயன்படுத்தப்படவிருப்பதால் அதற்கான கொடுப்பனவாக ஏக்கர் ஒன்றுக்கு 5ஆயிரம் ருபா வழங்கப்படவிருக்கிறது.
அதற்கான விண்ணப்படிவங்கள் நாடளாவியரீதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை முறைப்படி நிரப்பப்பட்டு அவ்வப்பிரதேச கமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்படவேண்டும் எனக் கேட்டகப்பட்டுள்ளது.
"நெற்செய்கையை மேற்கொள்ளும் வயல்களின் பொருட்டு இயற்கைத்திண்ம தாவரப்போஷாக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு விண்ணப்பப்படிவம் -2021-2022 ஆண்டு பெரும்போகம் "என விண்ணப்பபடிவத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் அதனை உரியமுறையில் நிரப்பி 'இயற்கைத்திண்ம தாவரப்போஷாக்கு என்னால் உற்பத்திசெய்யப்பட்டு பாவிப்பதாக உறுதியுரைக்கின்றேன்' என ஒப்பமிடவேண்டும்.
அப்படிவம் கமக்காரர் ஒழுங்கமைப்பு, அரசஉத்தியோகத்தர்/ கிராமசேவகர் , விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், விவசாயப்போதனாசிரியர் ஆகியோர் சிபார்சுசெய்து பெரும்பாக உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
இம்மாதம் ஆரம்பக்கூட்டங்கள் இடம்பெற்று அடுத்தமாத முற்பகுதியில் விதைப்புவேலைகள் ஆரம்பமாகவுள்ள இந்தநிலையில் சேதனப்பசளைக்காக பிரஸ்தாப விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒரு விவசாயி உயர்ந்தபட்சம் தனது 5ஏக்கர் நிலத்திற்கு 25ஆயிரம் ருபா பெறமுடியும்.
இவற்றுக்கான 5ஆயிரம் ருபா கொடுப்பனவு அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படுமெனத் தெரிகிறது. அதைக்கொண்டு சேதனைப்பசளையை உற்பத்திசெய்யவேண்டும் அல்லது கொள்வனவு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, விவசாயிகளால் உற்பத்திசெய்யப்படும் சேதனப்பசளைகளை அரசாங்கம் கொள்வனவுசெய்யும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment