அனைத்து கட்சி ஒன்றிய தலைவர் நிசாம் பெருமிதம்
அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற உந்துதலை முஸ்லிம் எம்.பிகளுக்கு அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் உருவாக்கி இருந்தது என்று இதன் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.
20 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் எம்.பிகள் ஆதரவு வழங்கி இருப்பது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்து இருப்பது பெருமகிழ்ச்சி தருகின்றது. இதை பாராட்டாமல் இருக்க முடியாது. தெளிந்த சிந்தனை, தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றுடன் செயற்பட்டு உள்ளனர்.
20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குங்கள் என்று அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் முஸ்லிம் எம்.பிகளை பகிரங்கமாக கோரி இருந்தது. இதன் மூலமாக அரசாங்கத்தின் கருணை கூர்ந்த பார்வை கிடைக்கும் என்று காரணம் சொல்லியும் இருந்தது.
இத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தமைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் பாணியில் விளக்கங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தந்து உள்ளபோதிலும் அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞையை வழங்கி இருக்கின்றனர் என்பதே உண்மை ஆகும்.
இது பெருந்தேசிய அரசியலில் மாத்திரம் அல்ல முஸ்லிம் தேசிய அரசியலிலும் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வரும் என்பது திண்ணம் ஆகும். இவ்விடயத்தில் நாம் ஒரு ஊக்கியாக, உறவு பாலமாக செயற்பட்டிருக்கின்றோம் என்பதில் பெருமை அடைகின்றோம்.
0 comments :
Post a Comment