அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கடந்த காலங்களில் தமது செயற்பாட்டு ரீதியில் அதிகபடியான ஆதரவுகளை வழங்கி வந்த இளைஞர்கள் அக்கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் உத்தியோக பூர்வமாக நேற்று இணைந்து கொண்டனர்.
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ரணீஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் அவரது காரியாலயத்தில் வைத்து இணைந்து கொண்ட அவ்இளைஞர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசால் கடந்த காலங்களில் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றுள்ளது என்றும் ஆனால் அது உரிய முறையில் மக்கள் மயப்படுத்தப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் இவற்றை முறையாக மயப்படுத்தும் செயற்பாடுகளில் நாம் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்தில் எமது சமூக இருப்பை தக்கவைத்துக் கொள்ள அதிகமான பிரயத்தனங்களை நாம் செய்ய வேண்டும். அதற்காக எச்.எம்.எம். ஹரிஸ் சிறந்த முன்னெடுப்புகளை செய்து வருகிற அதே வேளை எமது உரிமைகளை உரிய முறையில் வென்றேடுக்க நாம் அனைவரும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களிடம் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.