அதே போல் தம்புள்ள பள்ளிவாயலை தாக்கியோர் கைது செய்யப்படாமல் விட்டதும் தவறு. இதனை கண்டித்து உலமா கட்சி மட்டும் அரச ஆதரவிலிருந்து வெளியேறி ஒரேயொரு முஸ்லிம் கட்சியாகும். அதே ஆண்டு நடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 99 வீத முஸ்லிம்கள் மஹிந்தவுடன் ஒட்டியிருந்த முஸ்லிம் அமைச்சர்களின் கட்சிகளுக்கே வாக்களித்தது.
தம்புள்ள சம்பவத்துக்கெதிராக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளியேறிய உலமா கட்சியை முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. மாறாக மக்களை சமாளித்து தமிழில் மட்டும் அறிக்கை விட்டுக்கொண்டு அரசுடன் ஒட்டி இருந்த முஸ்லிம் கட்சிகளின் பின்னாலேயே மக்கள் சென்றனர்.
இதன் மூலம் அரசாங்கத்தை ஒட்டிக்கொண்டு அதன் மூலம் உண்டி கொழுக்கும் மக்கள் செல்வாக்குள்ள முஸ்லிம் கட்சிகளையே முஸ்லிம் பொது சனம் விரும்புகிறதே தவிர அரசு தீயதை செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை முஸ்லிம்களிடம் உண்மையாக இல்லை.
பணம், பதவியுள்ள கட்சியாயின் என்ன அநியாயம் நடந்தாலும் அரசுடன் ஒட்டியிருப்பதையே முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.
அப்படியில்லாத சிறிய கட்சிகள் அரசுடன் இருப்பதை விமர்சிப்பார்களே தவிர தமது பெரும் கட்சிகள் அப்படியிருந்தால் கண்டிக்க மாட்டார்கள்.
இதன் மூலம் முஸ்லிம் சமூகம் போலித்தனமான அரசியலில் மூழ்கியுள்ளது.
இதைத்தான் கடந்த ரணில், சஜித் அரசில் கண்டோம். தம்புள்ள, அளுத்கமவை விட மிக மோசமாக முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். திகன முதல் அக்குரனை வரை ஒரு வாரம் தாக்குதல் நடந்தது.
அளுத்கம தாக்குதலுக்கு மஹிந்த பொறுப்பு என சொன்ன முஸ்லிம் சமூகம் இந்த தாக்குதல்களுக்கு ரணில் சஜித் அமைச்சர்கள் பொறுப்பு என கூறமுடியாத அளவுக்கு புத்தி மழுங்கிப்போயிருந்தது.
அதன் பின் ஸஹ்ரான் தாக்கப்போகிறான் என்று தெரிந்தும், தாக்கட்டும் இதன் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தலாம் என ரணில் , சஜித் அரசும் இவர்கள் கொண்டு வந்த மைத்திரியும் வாளாவிருந்தனர். அதன் பின்னரான நிகழ்வுகள் கொஞ்ச நஞ்சமா?
கத்தி, வாள் என்று சொல்லி அதே அரசு கைது செய்தது. சப்பாத்துக்கால்கள், நாய் பள்ளிகள் நாசமாகின.
அப்படியிருந்தும் முஸ்லிம் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகவில்லை, விலகும்படி அக்கட்சி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுக்கவுமில்லை.
இப்படிப்பட்டதொரு ரோசம் கெட்ட அரசியலைத்தான் முஸ்லிம் சமூகம் செய்கிறது.
தமக்கு பிடித்த கட்சி தவறு செய்தால் பொறுப்பது தமக்கு பிடிக்காத அரசு பிழை செய்தால் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்பது?
எப்போது இந்நிலையிலிருந்து மாறப்போகிறோம்.?