நபிகளாரின் கடைசிப் பேருரை! மீள்பதிவு.

மக்களே!
மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் நான் உங்களைச் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது. ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு இணையாக எவருமில்லை. நான் அவனது தூதர் என்றும், அடிமை என்றும் சான்று பகர்கிறேன்.

மக்களே!
இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9-ம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும், பொருளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.

மக்களே!
அறிந்து கொள்ளுங்கள். அக்கிரமம் செய்யாதீர்கள். எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று. செல்வத்தின் உரிமையாளர் அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர! உங்களில் எவராவது மற்றவர்களுடைய பொருளின் மீது பொறுப்பேற்று இருந்தால், அதை அவர் உரிய முறையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

எச்சரிக்கையாக இருங்கள்!

ஒருவர் குற்றம் செய்தால் அந்தக் குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும். தந்தை செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) மகனோ, மகன் செய்த குற்றத்திற்கு தந்தையோ பொறுப்பாக மாட்டார். எந்தப் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம்.

அறிந்து கொள்ளுங்கள்!

(இஸ்லாத்துக்கு முந்தைய) அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் கால கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டு விட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.

வட்டி இன்றோடு முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. கடனாக கொடுத்த பணத்தை மட்டும் நீங்கள் வசூலித்துக் கொள்ளலாம். முதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு முத்தலிபுக்கு வர வேண்டிய வட்டி பாக்கியைத் தள்ளுபடி செய்கிறேன்.

மக்களே!
உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் ஆதிப்பெற்றோரும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள். எந்த ஓர் அரபிக்கும், ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த உயர்வும், சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே உங்கள் மேன்மையை- சிறப்பை நிர்ணயிக்கும். நிச்சயமாக இறைவனிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர், உங்களில் அதிக இறையச்சம் உள்ளவர்தான்.

மக்களே!
இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தலைமைக்குக் கீழ்ப்படியுங்கள். கருப்பு நிற அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும், அவர் இறைவனின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கு இடையில் நிலை நிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்.

மக்களே!
பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அவர்களை நன்றாகப் பராமரியுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவது போன்ற உடைகளையே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். உங்களால் மன்னிக்க முடியாத குற்றத்தை அவர்கள் செய்திருந்தால், அவர்களைப் பணியில் இருந்து நீக்கி விடுங்கள். அவர்களுக்குத் தண்டனை அளிக்காதீர்கள். அவர்கள் இறைவனின் அடியார்களாக இருக்கிறார்கள்'.
நபிகளாரின் கடைசிப் பேருரை!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -