ஒலுவில் எம்.ஜே.எம். பாரிஸ்-
சீனாவின் வுஹான் மாகாணத்திலுள்ள கடலுணவு சந்தையிலிருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது எனினும், வுஹானிலிருக்கும் ஆய்வு கூடத்திலிருந்து விஞ்ஞானிகளின் கவனக்குறைவால் கொரோனா வைரஸ் உலகத்திற்கு பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன.
அமெரிக்காவின் விஞ்ஞானியான ஸ்டீவன் மாஷர், கொரோனா வைரஸ்
பரவியதாக கூறப்படும் சந்தைக்கும், வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கும் 10 மைல் தூரம்தான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். கவனக்குறைவால் அல்ல; வேண்டுமென்றே கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது என்ற தகவல்களும் உண்டு.
அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. இது குறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ சீனா இந்த விஷயத்தில் உண்மையை மறைப்பதாகவும், நடந்ததை உலகிற்கு கூற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ மேலும் கூறியதாவது:-
இந்த வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றியது என்பது எங்களுக்குத் தெரியும். ஈரமான சந்தையிருந்த இடத்திலிருந்து ஒரு சில மைல் தூரத்தில் வுஹான் இன்ஸ்டிடியூட் ஓப் வைராலஜி ( wuhan institute of virology ) உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க அமெரிக்க அரசாங்கம் விடாமுயற்சியுடன் செயல்படுகிறது.
வுஹான் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வெளவால்கள் அருகிலுள்ள சந்தையில் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வெளவால்களை சந்தையில் விற்பதில்லை. மேலும் உணவு விடுதிகளில் சமைப்பதும் இல்லை என புதிய தகவல்கள் கூறின. இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்
சீனா, அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்றாலும் வேறு ஒரு காரணம் உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளை விடவும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால் கொரோனா வைரஸ் வெளியே கசிந்துள்ளது” என மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா முழுமையாக மறுத்துள்ளது