நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று கொடுக்கப்படுகின்ற நிவாரணங்கள் கொடுப்பனவுகள் பெரும்பாலான தோட்டப்புற மக்களுக்கும் அதைச்சுற்றியுள்ள நகர்ப்புற மக்களுக்கும் கிடைக்கவில்லையென என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசினேன்.அவர் இது தொடர்பாக கவனத்திற் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஸபக்ச தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
இன்று நுவரெலியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மதகுருமார்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது ஆனால் மலையகப்பகுதியைச் சேர்ந்த இந்து குருமார்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல மலையகத்தில் வேலையின்றி இருக்கின்ற இளைஞர் யுவதிகள் கூலி வீடுகளில் இருக்கின்றவர்கள்,ஆட்டோ சாரதிகள் , சுய தொழில் செய்வோர் என பலர் இருக்கின்றார்கள்;. இவர்கள் எவருக்கும் இதுவரை நிவாரணம் கொடுக்கப்படவில்லை என்பதனையும் நான் பிரதமர் அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன்.
இது தொடர்பாக நான் மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசிய போது இந்த நிவாரணங்கள் கொடுப்பனவுகள் அனைத்தும் கிராமசேவகர்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது தோட்டப்புறங்களில் பல கிராமசேவகர் நியமனங்களை வழங்கியிருந்தேன் ஆனால் அதற்கு பின் வந்தவர்கள் அதனை செய்யாததன் காரணமாக இன்று தோட்டப்புறங்களின் இவ்வாறான நிவாரணங்கள் வழங்கும் போது சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக இதுகுறித்தும் பிரதமர் அவர்கள் கவனமெடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களின் போது சிக்கல் நிலைமைகள் தோன்றாதவாறு பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
