பொதுமக்கள், அரச ஊழியர்கள், சட்டத்துறை மாணவர்கள் அறியவேண்டியவை:


நிருவாகத்துறை அதிகாரத்தில் நீதிமுறை மீளாய்வும், பொதுப்பொறுப்புடைமையும்

M.Mohamed Nabsar, LL B, MBA (SEUSL)
ரசாங்க உத்தியோகத்தர்களினால், அதிகாரிகளினால் பிரயோகிக்கப்படுகின்ற நாட்டின் நிருவாகத்துறை அதிகாரமானது நீதிமன்றங்களினால் மீளாய்வு செய்யப்படுவதானது தற்கால ஜனநாயக அம்சமாக காணப்படுகின்றது. ஆனாலும், இந்நடைமுறையானது இலங்கை நீதிமன்றங்களினால் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

நீதிமுறை மீளாய்வு எனும்போது அது அடிப்படையில் அது பொதுமக்களுக்குரிய சாதகமான விடயமாகவே பார்க்கப்படவேண்டியதாகும். இதனால் பொதுமக்களுக்கு அதிகாரமானது முறையாக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள10டாக ஜனநாயக கோட்பாடுகளுக்கமைய பிரயோகிக்கப்படவேண்டும் என்பது முக்கியமானதாகும். நீதிமுறை மீளாய்வானது தன்னிச்சையான அதிகாரச் செயற்பாடுகளை புறக்கணித்துப்பார்க்கும் அதேவேளை அதிகாரங்களை மீறுபவர்கள் அதற்கு பொறுப்பாளியாக ஆக வேண்டும் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் நிருவாகத்துறைக்கு அதிகாரமளிக்கப்பட்டவையை விடுத்து அதிகமாக அதிகாரங்களை பிரயோகிப்பதானது ULTRA VIRES என அழைக்கப்படுகிறது.

மீளாய்வின் அடிப்படைகள் அல்லது நியமங்கள்

நிர்வாகத்துறை அதிகாரத்தின் பிரயோகமானது பின்வரும் மூன்று அடிப்படைகளுக்கெதிராக மீளாய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

1. மனித உரிமைகள் நியமங்கள்

2. நிருவாகத்துறை நீதியின் பொதுக்கோட்பாடு

3. பொது நம்பிக்கைக் கோட்பாடு


இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 126 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை இதற்கான உதாரணமாக கொள்ளலாம். அரசியலமைப்பின் III ம் அத்தியாயத்தின் கீழ் காணப்படும் மனித உரிமைகள் நியமங்களுக்கெதிரான நிர்வாக அல்லது நிறைவேற்று நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் மீளாய்வு செய்கின்றன. மேலும் இவ்வுறுப்புரையின் கீழ், III ம் அத்தியாயத்தின் கீழுள்ள உரிமைகள் மீறப்படுமிடத்து அது தொடர்பில் மனுத்தாக்கல் செய்யும் உரிமையானது அனைத்து பிரஜைகளுக்கும் காணப்படுகின்றது.

மேலும், 1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் ஏற்பாடுகளிலிருந்து பொது நம்பிக்கை கோட்பாடு பலமும் சட்ட வலிமையும் கொண்டு காணப்படுகின்றது என்பதுடன் சட்டவாட்சி போன்ற அரசியல் கோட்பாடுகள், நிர்வாக மற்றும் நிறைவேற்று நடவடிக்கைகள் பொது நன்மைக்காகவும், நோக்கத்திற்காகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை குறிப்பிட்டுக்காட்டுகிறது. இதன்மூலம் எந்தவொரு தன்மதி அதிகாரமும் நிச்சயமானதோ அல்லது சுயேற்சையானதோ அல்ல என்பதனை இக்கோட்பாடு குறிப்பிடுகிறது. எனவே, பொது அலுவலர்கள் தமது அதிகாரத்தை பிரகோகிக்குமிடத்து உயர் நியமங்களை கருத்திற்கொண்டு செயற்படல் மிகவும் முக்கியமானதாகும். அரசியலமைப்பின் உறுப்புரை 3 மற்றும் 4 இனால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டதன் பிரகாரம், பொது ஊழியர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயேகம் செய்யுமிடத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் செயலாக அமைகிறது.

நிர்வாகத்துறை நீதியின் பொதுக்கோட்பாடுகளின் கீழ் நீதிமன்றங்கள் கணிசமான காலத்திற்கு மேலாக மீளாய்வு நியமங்களை பிரயோகித்து வருகிறது. இந்நியமங்கள் நியாயாதிக்க குறைபாடு, இயற்கை நீதியின் விதிகள் மீறுகை, தன்மதி அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட வரைவின் போதான வழு போன்றவற்றை அளவிடும் கருவிகளாக காணப்படுகின்றது. Council of Civil Service Unions Vs Minister for the Civil Service என்ற வழக்கில் Diplock

நீதிபதி அவர்கள், பாரம்பரிய நியம அடிப்படைகளை சட்டமுறண், நியாயத்தன்மையின்மை, நடைமுறை குறைபாடுகள் என வகைப்படுத்தினார். எவ்வாறாயினும், நீதிமுறை நியமங்கள் நிருவாகத்துறை தீர்மானங்களை எடுக்கும்பொருட்டு எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்பது கவனிக்கப்படத்தக்க விடயமாகும். நீதிபதிகளின் கைகளில் காணப்படும் மிகப்பெரிய ஆயுதமாக நீதிமுறை மீளாய்வு காணப்படுகின்ற போதிலும் அது அரசியலமைப்பின் வரையறைக்குட்பட்டு காணப்படவேண்டும் என்பதனை நீதிபதி Scarman வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 126 ம் உறுப்புரை

அரசியலமைப்பின் 140 மற்றும் 141 ம் உறுப்புரைகள் என்பன மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஆணையீட்டெழுத்தாணை, உறுதிகேள் எழுத்தாணை, தடையீட்டெழுத்தாணை, ஆட்கோணர்வு எழுத்தாணை, மீளாய்வு எழுத்தாணை போன்ற ஆணைகளை இடும் அதிகாரங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, இலங்கையில் இவ்வாறான ஆணைகளுக்கான விண்ணப்பத்தினை விடுத்து, நிர்வாகத்துறை நடவடிக்கைகளை அரசியலமைப்பின் உறுப்புரை 126 ன் கீழ் கேள்விக்குட்படுத்தும் சாதகமான சூழலும் காணப்படுகின்றன. இவ்வேற்பாட்டின் கீழ் விண்ணப்பம்மொன்றைச் செய்வதற்கு, விண்ணப்பதாரர் அரசியலமைப்பின் III ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது அடிப்படை உரிமை மீறலுக்குள்ளாகியருக்கவேண்டும். இவ்விரு வகையான பரிகாரம் பெறும் முறைகளும் அரசியலமைப்பை அடிப்படையாகக்கொண்டு பரிகாரம் பெற்றுக்கொள்ளும் எண்ணக்கருவைக் கொண்ட முறைகளாக நிருவாக சட்டப்பரப்பில் பார்க்கப்படுகின்றது. இங்கு ஆணை வழங்கும் நியாயாதிக்கமானது ஆங்கில பொதுச்சட்டத்தின் வளர்ச்சி என்பதனை மறந்துவிடக்கூடாது. மேலும், அடிப்படை உரிமைகள் நிருவாக நடவடிக்கைகளினால் மீறப்படுமிடத்து அவற்றிற்கு நிவாரணமளிக்கும் விடயத்தில் இலங்கை நீதிபதிகள் நிருவாகச்சட்டத்திலுள்ள வளமானதும், செழிப்பானதுமான சட்டவியலை அவ்வப்போது இரவல் பெற்றுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

Wickramatunga Vs Ratwatta என்ற வழக்கானது அரசியலமைப்பின் உறுப்புரை 126 ன் கீழ் விண்ணப்பம் செய்யப்பட்டது. நீதிமன்றமானது பொதுமக்கள் அவதானம் செலுத்தவேண்டிய நியாயமான நடத்தைகள் பற்றிய பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்தது. அத்தடன் அக்கோட்பாடுகள் அனைத்தும் நிருவாகச்சட்டத்தின் பரப்பெல்லையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவைகளாக காணப்பட்டது. பொது அலுவலர்களைப்பொறுத்தமட்டில், நியாயமான முறையிலும், நல்லெண்ணத்துடனும், அரசியலமைப்பில் அங்கிகரிக்கப்பட்ட, பிரகடனப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை சிதைக்காத வண்ணம் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Jayawardena Vs Wijetileke என்ற இவ்வழக்கும் உறுப்புரை 126 ன் கீழ் விண்ணப்பம் செய்யப்பட்டதொரு வழக்காகும். இங்கு இயற்கை நீதியின் விதிமுறையொன்று மீறப்பட்டிருந்தது. கம்பஹாவில் திடீர் மரணவிசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கேட்டறியப்படாமல் (hearing) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கு, அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) இனால் உத்தரவாதமளிக்கப்பட்ட ' சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பு' என்ற சொற்பதம் மீறப்பட்டுள்ளது என்பதுடன் பிரதிவாதி சட்ட அதிகாரமின்றி செயற்பட்டுள்ளார் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.  அதேபோன்று, Tennekoon Vs De Silva என்ற வழக்கில் நீதிமன்றமானது, நிருவாகச்சட்டத்துறை நிபுணர் H.W.R.Wade
அவர்களின் கருத்தினை மேற்கோள்காட்டி பொலிஸ் அதிகாரியின் இடமாற்றத்திற்கான காரணம் வழங்கப்படாமையானது உறுப்புரை 12(1) ல் குறிப்பிட்ட 'சட்டத்தின் பாதுகாப்பு' என்ற விடயத்தை மீறியுள்ளது என குறிப்பட்டது.
மேலும், Surendran Vs UGC வழக்கிலும் கூட நிருவாகச்சட்டத்திலுள்ள எண்ணக்கருக்களை கருத்திற்கொண்டு 1991 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் விஷேட உயர்தர பரீட்சைக்கு தோற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரி, 1990 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சைக்கும் தான் தோற்றிய பரீட்சைக்குமிடையே எவ்வித வேறுபாடும் இருக்க முடியாதென்று தான் சட்டரீதியாக எதிர்பார்த்திருக்க முடியுமென உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. எவ்வாறாயினும், UGC தனது வாதத்தில் இரண்டு பரீட்சைக்குமிடையேயான வேறுபாட்டை எண்பித்தபோதும், உறுப்புரை 12(1) ன் கீழான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலுள்ள வழக்கையொத்த Gunaratna Vs Sri Lanka Telecom வழக்கில், பட்டதாரியல்லாத எழுதுவினைஞர் ஒருவருடைய ' சட்டமுறையான எதிர்பார்ப்பு' புறக்கணிக்கப்பட்டிருந்தது என்பதன் அடிப்படையில் உள்ளீர்ப்புச் செய்யும் திட்டமானது முறையற்றது என நீதிமன்றம் குறிப்பிட்டது.
Banda VS Premechandra வழக்கில் அலுவலகங்களில் தாம் விரும்பியபடி காணப்படும் நபர்கள் தொடர்பில் காரணங்கள் எதுவும் குறிப்பிடாமல் அவர்களை வேலையிலிருந்து நிற்பாட்ட முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. எனினும் காரணங்கள் தேவையில்லை என்ற அர்த்தத்தை அது வழங்கவில்லை மாறாக காரணங்கள் கேட்டறியுமிடத்து அவை வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படாமல் போனால் அது உறுப்புரை 12 இனை மீறுவதாக அமையும். எனவே, அதிகாரமானது காரணங்களினால் ஆளப்பட வேண்டும் மாறாக சலனப்புத்தியினாலல்ல. அத்துடன் Gunaratne Vs Petroleum வழக்கின் ஆரம்பத்தில் காரணங்கள் எதுவும் தேவையில்லையென கூறப்பட்டபோதும், நிருவாகரீதியாக எடுக்கும் தீர்மானங்களின் போது காரணங்கள் கட்டாயம் காணப்படவேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. இதில் வணிக ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கான காரணத்தை கூட்டுத்தாபனம் குறிப்பிடாமையானது உறுப்புரை 12 இனை மீறுவதாக அமைந்துள்ளதென நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், அரசியலமைப்பின் உறுப்புரை 14 இல் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள கருத்து தெரிவிக்கும் சுதந்திரமானது அவசரகால சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது மீறப்பட்டுள்ளது தொடர்பில் Sriwardena Vs Liyanage இல்குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நியாயத்தன்மை (Reasonableness) பற்றிய எண்ணக்கரு கவனத்திற்கொள்ளப்பட்டது நிருவாகச்சட்டத்தின் உள்வாங்கலை எடுத்துக்காட்டுகிறது.

எனவே, நிருவாகத்துறை செயற்பாடுகளினால் பாதிக்கப்படும் நபரொருவர் இலங்கை அரசியலமைப்பின் III ம் அத்தியாயத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை எரிமைகள் மீறப்படுமிடத்து உறுப்புரை 126 இன் கீழ் நிவாரணம் பெற ஏற்பாடுகள் உண்டு;.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -