உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து 1ம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 2வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையை விஞ்சி அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 3வது இடத்தில் இத்தாலியும், 4வது மற்றும் 5வது இடங்களில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் உள்ளன.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதுவரை இத்தாலியில் 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்து அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதன்முறையாக 2வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 18 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதற்கடுத்து 3வது இடத்திலுள்ள ஸ்பெயினில் 16 ஆயிரம் பேரும், 4வது இடத்திலுள்ள பிரான்சில் 13 ஆயிரம் பேரும், 5வது இடத்திலுள்ள UKயில் 9 ஆயிரம் பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகளவில் நியூயோர்க்கில் மட்டும் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளின் முக்கிய நகரங்களில் இல்லாத அளவு நியூயோர்க்கில் 3 மடங்கு அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரம் கொரோனாவால் பாதிக்கபட்டது எப்படி என்பது குறித்து சினாய் மவுன்ட் இகான் ஸ்கூல் ஒப் மெடிசின் ( Icahn School of Medicine at Mount Sinai ) மரபியலாளர் ஹார்ம் வான் பேகல் ( geneticist Harm van Bakel ) விளக்கியுள்ளார்.
அமெரிக்காவில் பரவியுள்ள பெரும்பாலான வைரஸ் தொற்று ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானதே தவிர ஆசியாவிலிருந்து இல்லை. முதல் கொரோனா வைரஸ் நோயாளி நியூயோர்க்கில் கண்டுபிடிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகவே அதாவது February மாதம் ஆரம்பத்திலே அங்கு கொரோனா வைரஸ் சுழற்சி இருந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் அங்கிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு மட்டுமே அமெரிக்கா ஜனாதிபதி தடை விதித்தார். ஆனால் ஐரோப்பாவைச் சேர்ந்த பலர் அமெரிக்காவுக்குள் மிகச் சாதாரணமாகவே வந்து சென்றனர். அவர்களால்தான் பெருமளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் பரவியுள்ள வைரஸ் வகை மாதிரிகளை ஆராய்ந்ததில் ஐரோப்பிய வைரஸ் மாதிரிகளே அமெரிக்காவில் பிரதானமாகப் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே ஆசிய நாடான சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் பரவவில்லை.
March மாத ஆரம்பத்தில் தான் நியூயோர்க்கில் DNA சோதனை செய்யப்பட்டது. அதை February மாதமே செய்திருந்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். இனிமேலாவது முறையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுவது குறையும் ” என தெரிவித்துள்ளார்.