நீண்ட கால புகையிலை பாவனை வாய்ப்புற்று நோயை உருவாக்க வழி வகுக்கும்.


நேர்கண்டவர்: பைஷல் இஸ்மாயில்
தொற்றா நோய்களில் ஒன்றாக புற்றுநோய்கள் காணப்படுகின்றது, அதில் வாய்ப்புற்று நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது இதுபற்றிய கருத்து என்ன?

உடம்பில் பல விதமான புற்று நோய்கள் காணப்படுகின்றது. அந்தப் புற்று நோய்களில் ஒன்றுதான் வாய்ப்புற்று நோயாகும். இந்த வாய்ப்புற்று நோய் உலகில் எல்லா நாடுகளிலும் காணப்பட்டாலும் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், சீனா, வியட்னாம், மலேசியா போன்ற நாடுகளில் இது அதிகமாக காணப்படுகின்றது. இந்த நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றது.

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இந்த வாய்ப்புற்று நோய் இலங்கையில் மூன்றாமிடத்தில் இருந்து வந்தது, இப்போது முதலாமிடத்துக்கு வந்துள்ளது. ஏனென்றால் இந்த நோய்த் தாக்கத்தினால் வருடம் ஒன்றுக்கு சுமார் 2500 – 3000 பேர் வரை பாதிப்புக்குள்ளாகி வருகின்ற அதேவேளை 1500 – 2000 பேர் வரை பலியாகியும் வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் நகர்ப்புற சமூகத்தினரை காட்டிலும் கிராமப்புற மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

எமது நாட்டில் இந்த வாய்ப்புற்று நோய் தாக்கம் இவ்வாறு கூடிக்கொண்டே செல்லுமாக இருந்தால் இன்னும் சில வருடங்களின் பின்னர் உலக தர வரிசையில் எமது நாடு வாய்ப்புற்று நோயில் முதலாமிடம் வகிக்கும் சாத்தியமே மிக அதிகமாகவுள்ளது.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இந்த வாய்ப்புற்று நோய் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இருந்து வந்தது. உதாரணமாக ஆயிரத்தில் ஒன்று என்ற ரீதியில் சுமார் 30 – 40 வயதுக்குற்பட்ட ஒரு இளம் வயதினர்தான் இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகி காணப்பட்டு வந்தனர். இப்போது இந்த நிலை மாறி மிக அதிகமாக இளம் வயதினர் பாதிப்புக்குள்ளாகி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இளம் வயதினர் இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகக் காரணம் என்ன?

இலங்கையில் வயதான பிரிவினரிடையே புகையற்ற புகையிலை பாவனை தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கிராமப்புற மக்கள் மத்தியில் வெற்றிலை, பாக்கு, புகையிலை, புகைத்தல், மதுபானம் போன்றவற்றை ஒரு பொழுது போக்கான விடயமாகக் கருதி இதை பாவித்து வருகின்றனர். இதற்குக் காரணம் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் வாய்ப்புற்று நோய் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் இல்லை என்பதேயாகும்.



அதுமாத்திரமல்லாமல், இன்றைய இளைஞர்கள் புகையிலையை வேறு வடிவில் பகடிக்கு உபயோகிப்பதாக என்னிக்கொண்டு செய்யும் செயற்பாடுகளுடன் மதுபானம், சிகரெட், பீடி மற்றும் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பாக்கு வகைகளையும், சுண்ணாம்பு கலந்த வெற்றிலையுடன் புகையிலையையும் பாவித்து வருகின்றனர். இவ்வாறு இளம் சமூகத்தினர் ஒரு பொழுது போக்காக நினைத்து செய்கின்ற இந்த செயற்பாடுகள் யாவும் அதற்கு அடிமையாக வைத்து விடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.



இந்த பழக்கவழக்கங்கள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு நிச்சயம் 100 சதவீதம் வாய்ப்புற்று நோய் ஏற்பட்டுவிடும். இதுவேதான் அவர்கள் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகக் காரணமாக அமைந்து விடுகின்றது.



இந்த வாய்ப்புற்று நோய் வருவதற்கான காரணம் என்ன?

மனிதர்கள் இயற்கையை விட்டு விழகிச் செல்வதன் காரணத்தால்தான் இந்த வாய்ப்புற்று நோய் அதிகரிக்கக் பிரதான காரணமாக அமைவதுடன் வெற்றிலை, பாக்கு, சுன்னாம்பு, புகையிலை, மதுபானம், சூரிய ஒளி போன்ற காரணங்களினால் இந்த வாய்ப்புற்று நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணங்களாக காணப்படுகின்றது.

இதில் புகையிலை பாவனையின் மூலம்தான் இத்தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தப் புகையிலைப் பாவனையை ஒவ்வொருவரும் விதவிதமான முறையில் பாவித்து வருகின்றனர். வெற்றிலை சாப்பிடுகின்றவர்கள் ஒரு புகையிலைத் துண்டை வைத்து அதனுடன் சேர்த்து சாப்பிடுவது, தனிப் புகையிலையை சாப்பிடுவது, சிலர் புகை பிடிப்பதன் மூலமாக பாவிப்பது, சிலர் புகையிலைத் தூளை மூக்கினூடக அதை உறுஞ்சுவது போன்ற பாவனையில் ஈடுபடுவதன் மூலம் இப்புற்று நோய் ஏற்படுகின்றது. இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனை எவ்வாறு பாவித்தாலும் அதன் தாக்கம் வாயில் எப்பகுதியிலாவது வாய்ப்புற்று நோயை ஏற்படுத்திவிட காரணமாக அமைந்துவிடுகின்றது.

புகைத்தல் பாவிப்பவர்களுக்கு இன்னுமோர் விடயத்தை சொல்லவேண்டும், புகை பிடிப்பதன் மூலம் வாய்ப்புற்று நோய் மட்டுமல்ல நுரையீரல் மற்றும் தொன்டைப் பகுதியில் அவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்கின்றேன்.
வெற்றிலை, பாக்கு, புகையிலை மற்றும் புகைத்தல் போன்றவற்றுள் இதில் ஏதாவது ஒன்றை பாவித்துக்கொண்டு மதுபானத்தையும் அதனுடன் சேர்த்து எடுப்பார்களாக இருந்தால், சாதாரண வாய்ப்புற்று நோய்த் தாக்கத்தை விட 15 அல்லது 20 மடங்கு அதிக தாக்கத்தை மதுபானம் அதிகரிக்கச் செய்து விடுகின்றது.

என்ன காரணம் என்றால், மதுபானத்தில் இருக்கின்ற இரசாயணம் புகையிலையிலுள்ள இரசாயணத்தை மிக இலகுவாக கரைத்துவிடுகின்ற தன்மையைக்கொண்டுள்ளது. அதனால் வாயிலுள்ள தோல் பகுதியை மிக வேகமாக தாக்கக்கூடிய சக்தி மதுபானத்துக்குள்ளது. அதனாலேயேதான் இத்தாக்கம் அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வல்லரசு நாடுகளிலுள்ள பெண்கள் மது அருந்துதல், புகைத்தல், போன்றவற்றால் இந்த வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகின்றனர். ஆனால் எமது நாட்டிலுள்ள பெண்கள் வாய்ப்புற்று நோயினால் அதிகளவு பாதிக்கப்படாத போதிலும் புகையற்ற புகையிலை பாவனையாலும் மூக்குப் பொடி, பாவனையாலும், பாக்கு பாவனையாலும் இந்த வாய்ப்புற்றுக்கு ஆளாகின்றனர்.
உலகளாவிய ரீதியில் 80 சதவீதமானவர்கள் வெற்றிலை, பாக்கு, புகையிலை பாவனை மற்றும் மதுபானம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு இந்த வாய்ப்புற்றுத் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
அதுமாத்திரமல்லாமல், மிக அதிக நேரம் சூரிய ஒளியில் வயல் வேலை செய்கின்ற விவசாயிகளுக்கு இந்த வாய்ப்புற்று நோய் ஏற்படுகின்றது. சூரிய ஒளியில் இருந்து வருகின்ற சில கதிர் வீச்சின் தாக்கம் அவர்களை நேரடியாக தாக்குவதன் மூலமாக இது ஏற்படுகின்றது. அதன் தாக்கம் அவர்களின் கீழ் உதட்டை தாக்குகின்றது.
இப்போது HPV என்ற வைரஸ் தாக்கத்தின் மூலமாக இந்த வாய்ப்புற்று நோய் வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த HPV என்ற வைரஸ் இளம் வயதினரை மிக அதிகமாக தாக்குகின்றது. இதன் தாக்கம் எவ்வாறு காணப்படும் என்றால் வாயின் பின் பகுதியில் அதாவது நாக்குக்கு கீழ் பகுதியில் ஏற்படுகின்றது. இதன் மூலமாக ஒருவர் HPV என்ற வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இருக்கின்றார் என்பதை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.
இது எதனால் ஏற்படுகின்றது என்றால், ஒருவர் பலரிடம் வாய் மூலமான பாலியல் தொடர்புகளை (Oral Sex) வைத்திருப்பவர்களுக்கே இந்த HPV வைரஸ் தாக்கம் ஏற்படுகின்றது. இந்த HPV என்ற வைரஸ் தாக்கத்தின் மூலம் பாதிக்கப்படுகின்ற வாய்ப்புற்று நோயளர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய ஒரு தேவையில்லை. இந்த வாய்ப்புற்று நோயினை ரெடியோ தெரப்பி (Radiotherapy) மற்றும் ஹிமோ தெரப்பி (Hemotherapy) ஆகியவை மூலமாக இதை குனப்படுத்தலாம்.
எனது அனுபவத்தில் HPV என்ற வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை 06 இளம் பெண் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும். HPV என்ற வைரஸ் பரிசோதனையை இங்கு எந்த வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ள முடியாது. இப்பரிசோதனையை கொழும்பு பல்கலைக் கழகத்தினூடாத்தான் மேற்கொண்டு கண்டுபிடித்தேன்.
இவைகள் இல்லாமலும் இந்த வாய்ப்புற்று நோய் வரலாம். இது ஆயிரத்தில் ஒருவருக்கே வரும். ஏனென்றால் அவர்களின் பரம்பரையில் இருந்து வருகின்ற விடயங்களில் ஒன்றாக இருக்கின்றபடியினால் இது வருவதற்கு சாத்தியமுள்ளது.

அதுமாத்திரமின்றி ஒரு மனிதன் பிறக்கும்போது இதற்குரிய மூலசாதனம் அவர்களின் உடம்பிலேயே இருக்கின்றது. அது எமது செயற்பாடுகளுக்கு ஏற்ப இந்த வாய்ப்புற்றின் தாக்கம் எமக்கு ஏற்படுகின்றது என்பதையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

ஒருவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கின்றதா? இல்லையா? என்பதை எவ்வாறு அடையாளங் காண்டுகொள்வது,
எமது வாய்க்குள் இருக்கின்ற தோல் பகுதிகள் யாவும் மிக மென்மையாகவும், ரோஸ் கலருடன் ஒரு வலு வலுப்பான தன்மையுடனும் காணப்படும். இந்தத் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும்.
அதாவது நாக்கிலும், கண்ணத்திலும் மாறாத ஒரே இடத்தில் இருக்கும் சிவப்புப் படலம், வெண்படலம் (Leukoplakia), ஆறாத காயங்கள், முகத்திலும் தாடையிலும் வருகின்ற வேதனைகள், உதடு, நாக்கு, தொண்டை, வாயின் கீழ் தளம், மேல் தளம் போன்ற பகுதியில் கடினமான தன்மை உண்டாகும், ஒரு வறன்ட தன்மையை உணரக்கூடியதாக இருக்கும், சாப்பிடும்போது ஒரு எரிவுத் தன்மை உண்டாகும், பால் கறி சாப்பிட முடியாதளவு இருக்கும், சுடு நீர் குடிக்கும்போது எரிவுத்தன்மை உண்டாகும், வாய் திறக்க கடினமாக இருக்கும், நாக்கை வெளியில் நீட்டுவதற்கு முடியாதளவு இருக்கும், ஈறுகளில் இரத்தம் வடிதல், பல் ஆட்டம் காணுதல், உணவு உட்கொள்வதில் சிரமம், காது வலி, கன்னத்தில் விரைப்புத்தன்மை, கழுத்தில் கட்டி போன்றவைகள் அதன் அடையாளங்களாக காணப்படும்.

இந்த அடையாளங்கள் இருக்குமாக இருந்தால் எந்த சந்தேகங்களுமின்ற வாய், முகம், தாடை (OMF Surgeon) என்ற வைத்திய நிபுணர்களை உடனடியாக சந்தித்து இதற்குரிய வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய சிகிச்சைகளையும் தாமதியாமல் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அது பாரிய ஆபத்தை எமக்கு விளைவித்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.

இந்த வாய்ப்புற்று நோயை அடியோடு இல்லாமல் செய்து விடலாமா?

எவ்வித உடல் நோவின்றி ஏற்படக்கூடிய இந்த வாய்ப்புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதனூடாக பாதிக்கப்பட்ட தரப்பினரை அத்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். வெற்றிலை, பாக்கு, புகையிலை, புகைத்தல், மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவதன் ஊடாக வாய்ப்புற்று நோயிலிருந்து முற்றாக விடுபட முடியும்.

எமது நாட்டில் அதி நவீன கருவிகள் இப்போது இருக்கின்றது. அதன் மூலமாக ஒருவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கின்றதா? இல்லையா? என்பதை மிகத் துள்ளியமான முறையில், அதன் அளவுகளையும் கண்டுபிடிப்பதற்கான வசதி வாய்ப்புக்கல் இருக்கின்றது. அதற்காக முதலில் (BIOPSY TEST) என்ற பரிசோதனையை மேற்கொண்டு அதில் கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் சீ.ரி.சி ஸ்கேனிங் (CTC SCANNING), எம்.ஆர்.ஐ ஸ்கேனிங் (MRI SCANNING), பெட் ஸ்கேனிங் (PET SCANNING) போன்ற பரிசோதனைகள் மூலமாக கண்டுபிடித்து இதனை இல்லாமல் செய்துவிடலாம்.
எமது நாட்டில் இப்போது இருக்கின்ற பெட் ஸ்கேனிங் (PET SCANNING) என்ற கருவி அதி நவீன கருவியாகும். இதன் மூலமாக ஒருவர் பெட் ஸ்கேனிங் (PET SCANNING) செய்துபார்ப்பதன் மூலம் எமக்குள் இருக்கின்ற வாய்ப்புற்று நோயின் அளவை மிகத் துள்ளியமாக அறிந்துகொண்டு அதற்கான பாதுகாப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையிலேயேதான் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த நிலைமை முதலில் மாறவேண்டும். அப்போதுதான் அவர்களை அதிலிருந்து முற்றாக பாதுகாக்கலாம். மேலும், வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை கிராமப்புறங்களிலும், நகர்ப் பறங்களிலும் அதிகதிகமாக நடாத்தி அம்மக்களுக்கு விழிப்பூட்டுவதன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
இவ்வாறான விடயங்களை மையமாக வைத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கிராமப் புறங்களில் வாழ்கின்ற மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் எனது தலைமையின் கீழ் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் நேரடியாகச் சென்று அம்மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும், அவர்களுக்கு தேவையான இலவச வைத்திய நடமாடும் சேவையுடன் சிகிச்சைகளையும் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளோம்.
இவ்வறான நிலைமைகளை எமது உடலில் நாம் அவதானித்தால் அல்லது ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதுதொடர்பான ஆலோசனைகளை 0773792225 என்ற அலைபேசிக்கோ அல்லது maxfacanu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை முற்றிலும் இலவசமாக உடனுக்குடன் கேட்டறிந்து அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் நோய் முற்றிய பின்னர் வைத்தியரின் உதவியை நாடிச் சென்று அதனை குனப்படுத்த முடியாமல் தங்களின் அன்றாட வாழ்வியல் முறையை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி தவிப்பதை நான் காண்கின்றேன். இதிலிந்து எமது நாட்டையும், எமது மக்களையும் பாதுகாப்பதே எமது சேவையாக நான் கருதுகின்றேன்.

இந்த வாய்ப்புற்று நோயை குனப்படுத்தலாம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் குறிப்பிட்ட விடயங்களில் கவனமாகவும், அதன் ஆலோசனைகளையும் நாம் செய்வோமாக இருந்தால் எதிர்வரும் 05 வருட காலப்பகுதியில் எமது நாட்டில் எந்தவொரு வாய்ப்புற்று நோயாளர்களும் இல்லாமல் செய்யலாம் என்பதில் நான் உறுதி கூறுகின்றேன்.

Dr. Anushan Madhushanka
MD(OMF), MFDRCS(Ire), FFDRCS(Ire)
Consultant Maxillofacial Surgeon
Sub Sp.Cleft & Facial Reconstruction Surgeon
Teaching Hospital
Batticaloa


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -