கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த தருணத்தில் தேர்தல்களுக்கு அஞ்சியது போன்று, தற்போது எதிர்க்கட்சியில் உள்ளபோதும் தேர்தல்களைக் கண்டு அச்சமடைவதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, அரசாங்கத்திடமிருந்து எப்படியேனும் தேர்தலொன்றைப் பெற்றுக் கொள்வதே, எதிர்க்கட்சியின் செயற்பாடாக இருக்கும். நாம் எதிர்க்கட்சியில் இருந்த தருணத்திலும், ஏன் தற்போதும் கூட தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தோம்.
நாம் அரசாங்கத்திலிருந்த காலத்தில், உரிய காலத்துக்கு முன்பதாகவே தேர்தலை நடத்தியிருந்தோம். என்றாலும், கடந்த ஐந்து வருட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் முடியுமானவரை தேர்தல்கள் பிற்போடப்பட்டன.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென்றால், பாராளுமன்றத்தைக் கலைக்கும் யோசனையை நாளை கொண்டுவந்தாலும், அதனை ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம்.
பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்தால், ஊழல்கள் அதிகரித்துவிடுமென எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். பாரிய ஊழல் மோசடிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத, கடந்த அரசாங்கத்தில்தான் இடம்பெற்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், புதிய வாகனக் கொள்வனவுகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதுடன், அந்நிதியில் மக்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்கிறது என்றார்.