நூருல் ஹுதா உமர்,எம்.என்.எம்.அப்ராஸ்-
சிங்கள மக்களின் நகரம் கண்டி என்பது போல, தமிழர்களின் நகரம் யாழ் போல கிறிஸ்தவர்களின் நகரம் நீர்கொழும்பு என்பது போல முஸ்லிம்களின் நகரம் கல்முனையே என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார்.
கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாயில் முன்றலில் நேற்று (31) மாலை முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வெஸ்டர் ஏ.எம். ரியாஸ் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு 1994 இருந்து ஆரம்பமானதாகும். நானும் அவரும் சவூதியில் வைத்து இந்த நாட்டின் முஸ்லிங்களின் இருப்புப்பற்றி தீவிரமாக ஆராய்ந்துள்ளோம். அவரும் நானும் சட்டக்கல்லூரியில் மாணவ தலைவர்களாக இருந்த வரலாற்றை நினைவு கூறுகிறேன்.
இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கென தீவிரவாத இயக்கம் எதுவும் இருக்கவில்லை. முஸ்லிங்கள் தீவிரவாத கொள்கைகளை எப்போதுமே ஆதரித்ததுமில்லை. ஆனால் ஒருவர் செய்த வேலையால் சகல முஸ்லிங்களுக்கும் தலைகுனிவாக அமைந்தது. அந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை சட்டத்தரணியாக இருந்த நாங்கள் போராடி விடுதலை செய்துள்ளோம்.
கிழக்கில் முஸ்லிம்கள் 40% வீதம் மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் கிழக்கிற்கு வெளியே 60 % வீதம் முஸ்லிங்கள் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் வாழும் நாங்கள்
பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்து இணைந்தே வாழ வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறந்த ஒரு ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். இந்த ஜனாதிபதி சொல்வதை
செய்யக் கூடிய தைரியமான ஆளுமை மிக்கவர். இந்த நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றும் திறமை கொண்டவர். தேர்தல் காலங்களில் மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை செய்தவர்கள் கண்ணாடி முன்னர் நின்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
எமது நாடு முன்னேற வேண்டும் என்றால் பாதுகாப்பு அவசியம் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ
பாதுகாப்பு அவசியம் அந்த பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியவர் எமது ஜனாதிபதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஜாதி பேதங்களை மறந்து நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
இந்நிகழவில் இலங்கை லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் உவைஸ் முஹம்மட் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

