ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 48வது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை (7) பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாஹ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அறபா இல்லம் 257 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், ஹிரா இல்லம் 256 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், சபா இல்லம் 184 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
இறுதி நிகழ்வில் அஞ்சல் ஓட்டம், அணிநடை கண்காட்சி, பேன்ட் குழுவின் சிறப்பு பேன்ட் வாத்தியக் கண்காட்சி, கராத்தே போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.ரீ.அஜ்மீர், எம்.ஜே.எம்.றிப்கா மற்றும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், எம்.எச்.எம்.நசீர், ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் யூ.எல்.அஹமட், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், வெற்றிபெற்ற அணிகளுக்கும் அதிதிகளால் கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.