ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (06) புதன்கிழமை உடதும்பர, ஹசலக பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எங்களது முயற்சி வெற்றிபெற்ற பின்னர் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணையத் தொடங்கியுள்ளனர். அதாவுல்லாவுடனும், ஹிஸ்புல்லாஹ்வுடனும் இணைந்தவர்கள் இப்போது எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றனர். சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு நெருங்கி வருவதை நாங்கள் கண்கூடாக காண்கிறோம்.
உடதும்பர தேர்தல் தொகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு தீர்வுகாணும் நோக்கில் இரு மாதங்களுக்குள் பாரிய குடிநீர்த் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறோம்.
மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களுக்காக எமது அரசாங்கம், முன்னைய எந்தவொரு அரசாங்கமும் செய்யாதளவுக்கு பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் 300 பில்லியன் ரூபா முதலீட்டில் நீர் வழங்கல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
குண்டசாலை - ஹாரகம நீர் வழங்கல் திட்டத்துக்கு 23 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்து அதனை முன்னெடுக்கவுள்ளோம். அத்துடன் நாட்டில் மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டத்தை கண்டி வடக்கு, பாத்ததும்பர பிரதேசத்தில் நிர்மாணித்து வருகின்றோம்.
தங்களால் மாத்திரம்தான் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என மேடைகளில் பேசுத்திரிகின்றனர். ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை நாங்கள் தெளிவான முறையில் சமர்ப்பித்துள்ளோம். இது இவ்வாறிருக்க, தற்போது இன்னுமொரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளனர்.
மக்களை ஏமாற்றும் எதிரணிக்கு சோரம்போகாமல், சரியான முறையில் சிந்தித்து நல்லதொரு ஜனாதிபதியை தெரிவுசெய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. கறைபடியாத கரம்கொண்ட எங்களது வேட்பாளர் சஜித் பிரேமதாசவே இந்த நாட்டுக்கு பொருத்தமான தலைவராக வருவார் என்றார்.