சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையினால் நீர் குறுக்கறுத்து வீதி ஒன்று உடைந்து காணப்பட்டது. அவ்வாறு உடைந்து காணப்பட்ட வீதியிலுள்ள மண்ணை சிலர் தோண்டி எடுத்து உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியிலுள்ள வீதியில் காணப்பட்ட மண்ணையே இவ்வாறு ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சனநடமாட்டம் இல்லாத நேரத்தில் இவ்வாறான திருட்டு வேளை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் அம்மண் காணப்பட்டதால் அதனை விற்பனை செய்ய உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றுள்ளனர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சட்டவிரோத செயலைச் செய்தவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.