இதன் போது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்ததோடு மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கான புதிய மின்பிறப்பாக்கியை(Generator)கையளித்ததோடு நாளாந்த நோயாளிகள் விடுதியில் தாங்காது குறித்த நேரத்திற்கு மாத்திரம் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு வீடு திரும்புகின்ற முறையிலமைந்த நாளாந்த சிகிச்சை பிரிவினையும்(Daily Treatment Unit)திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் டீ.எல்.ஜவ்பர் கான்,மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.அன்ஸார் உற்பட பலரும் கலந்துகொண்டனர்.
மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை கட்டட அபிவிருத்திக்காக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 185 மில்லியன் ரூபாவுக்கான உரிய அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் அரசாங்கத்தால் எவ்வித வேலைகளும் மேற்கொள்ளப்படவில்லை.அதன் பின்னர் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களின் பெருமுயற்சியில் இந்த வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடிக்கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக மத்திய பொறியியல் கட்டட நிறுவகத்தால் அளவீடுகள் செய்யப்பட்டு ரூபா 640 மில்லியனுக்கான அங்கீகாரம் பெறப்பட்டது.இதற்காக முதியோர் இல்ல காணி ஒன்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனக்த்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதும் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.இவ்விடயங்களையும் யூனானி வைத்தியசாலையின் தேவைப்பாடுகளையும் தனதுரையில் விளக்கி சுகாதார இராஜாங்க அமைச்சரின் காலத்திற்குள்ளே இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.என்.முபீன் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் தனதுரையில் வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது உரையாற்றிய இதற்கு சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் இதற்கு முன்னரும் இதுதொடர்பில் தான் பலமுயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு இவ்விடயத்தை முடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்தார்.



