தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டம் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 2 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுத்த இப்போராட்டம் குறித்த அரசியல் கைதியின் நிலைமையை கருத்தில் கொண்டு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் போது முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மகசின் சிறையில் ஒன்பதாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கனகசபை தேவதாசன் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும் அவரை பார்வையிடுவதற்காக தேசிய சகவாழ்வு சமூக முன்னேற்ற அரசகரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சென்று உண்ணாவிரதத்தை நிறைவு செய்ததை அடுத்து மேற்குறித்த போராட்டமும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

