பிராந்தியத்தின் இயல்வு நிலையினை கொண்டு வருவதற்கு அரச திணைக்களங்கள், காரியாலயங்கள், சிவில் அமைப்புக்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்ட நிகழ்வுகள் மற்றும் இப்தார் போன்ற நிகழ்வுகளை நடாத்தி மக்களின் அச்சநிலையை போக்க முன்வர வேண்டும் என சிலோன் மீடியா போரம் கோரிக்கை விடுக்கின்றது என அதன் தலைவர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (18) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என எமது மண்ணுக்கு வந்து கூறிச் சென்ற பின்னரும் எமது பிராந்தியத்தில் சில அரச நிறுவனங்களில் மக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படும் வண்ணம் பாதுகாப்பு கெடுபிடிகள் இருப்பதையிட்டு குறித்த தினைக்களத் தலைவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
நாட்டில் அசாதாரண நிலைமை கருதி ஊடக நிறுவனங்கள் பங்கச்சார்பின்றி நடுநிலையான எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காதவாறு செய்திகளை வெளியிடுதல் வேண்டும்.
நாட்டில் நடந்தேறி முடிந்த முப்பது வருட கால யுத்த நிலைமையின் போது இன ரீதியாக உருவாக்கப்பட்ட அரச காரியாலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்று இன்று நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை சில ஊடகங்கள் குறித்த ஒரு சமூகத்தின் மீது மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதனால் குறித்த சமூகம் தனக்கொரு தனித்துவமான ஊடகம் தேவை என உணரும் அளவுக்கு ஊடக நிறுவனங்கள் இன ரீதியான ஊடகங்கள் உருவாகுவதற்கு நடந்து கொண்டுள்ளமை கவலையளிக்கிறது.
சிலோன் மீடியா போரம் நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் உரிமை சார்ந்த விடயங்களில் விட்டுக் கொடுப்பின்றி செயற்படும் எனவும் தெரிவித்தார்.